தங்கையைக் கிண்டல் செய்தவரைக் கொல்ல திட்டம்... கூலிப்படையினருடன் அண்ணன் கைது!
சென்னை: தங்கையை கிண்டல் செய்தவரை கொலை செய்ய திட்டமிட்ட இளைஞர் மற்றும் கூலிப்படையினர் 6 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் உதவி கமிஷனர் லட்சுமி நாராயணன் தலைமையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்லப்பா, சப்-இன்ஸ்பெக்டர்கள் தீனதயாளன், முத்து மற்றும் போலீசார் ராம்நகர், வேளச்சேரி மெயின் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர், சாலையில் போலீசாரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், போலீசார் அவர்களது வாகனங்களைச் சோதனையிட்டனர். அதில், அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த ராஜேஷ்(25), நாகராஜ்(29), பனையூரைச் சேர்ந்த மோத்திபாபு(30), கொட்டிவாக்கத்தை சேர்ந்த பாலா(29), பெசன்ட் நகரை சேர்ந்த காசிம்(25), பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்ரம்(29) என்பது தெரியவந்தது.
மேலும், பனையூரை சேர்ந்த அசாரூதீன்(23) என்பவரின் தங்கையை அதே பகுதியைச் சேர்ந்த பரகத்அலி என்பவர் கிண்டல் செய்ததாகவும், எனவே அவரைக் கொலை செய்ய அசாரூதீன் ரூ.75 ஆயிரம் கொடுத்து கூலிப்படையை அனுப்பியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப் பட்டது.
இதையடுத்து அசாரூதீன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரம் பணம், 6 செல்போன்கள், 6 கத்திகள், 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.












Click it and Unblock the Notifications