நிலவேம்பு விவகாரம்- கமல் மீது நடவடிக்கை இல்லை.. சென்னை போலீஸ்
நிலவேம்பு விவகாரத்தில் கமல் மீது எந்த வித நடவடிக்கையும் இல்லை என சென்னை கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சென்னை: நிலவேம்பு விவகாரத்தில் மனுதாரரின் புகாரில் எந்தவித முகாந்திரமும் இல்லாததால் நடிகர் கமல் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று சென்னை கமிஷனர் அலுவலக போலீஸார் முடிவெடுத்துள்ளனர்.
டெங்குவிலிருந்து தங்களை பாதுகாக்க பொதுமக்கள் நிலவேம்பு கசாயத்தை அருந்துமாறு அரசு அறிவித்தது. நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்டோரின் ரசிகர்கள் நிலவேம்பு கசாயத்தை பொதுமக்கள் கூடும் இடங்களில் விநியோகம் செய்து வந்தனர்.
நிலவேம்பு கசாயத்தால் மலட்டுத் தன்மை ஏற்படுவதாக புரளி சுற்றி வரும் நிலையில் அந்த தகவல் குறித்த ஆழந்த ஆய்வு முடிவுகள் வரும்வரை தனது நற்பணி மன்றத்தார், நிலவேம்பு கசாயத்தை வழங்க கூடாது என கமல் கடந்த 18-ஆம் தேதி டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார்.
சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்ற சமூக சேவகர் கடந்த 19-ஆம் தேதி ஒரு புகார் அளித்துள்ளார். அதில், நிலவேம்பு கசாயம் குறித்து பொய் தகவலை கமல் பரப்பியுள்ளார் என்றும், அவரின் டிவிட்டர் கணக்கை நீக்க வேண்டும் என்றும், வன்முறையை தூண்டியதற்காக அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்திலும் நடிகர் கமல் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தேவராஜன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அந்த மனு மீதான விசாரணை கடந்த 25-ஆம் தேதி நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தேவராஜனின் புகாரின் முகாந்திரம் இருந்தால் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்றார்.
இதுகுறித்து சட்ட ஆலோசனை மேற்கொண்ட காவல்துறையினர், கமல் மீது மனுதாரர் அளித்த புகாரில் முகாந்திரம் இல்லாததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்ற முடிவெடுத்து தேவராஜின் புகார் மனு இன்று முடித்துவைக்கப்பட்டது.