பல வருடங்களுக்கு பிறகு.. போலீஸ் கெடுபிடியிலிருந்து 'விடுதலை' பெற்ற போயஸ் கார்டன் மக்கள்!
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் காவல் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சுதந்திரமாக நடமாட முடிகிறது.
சென்னை: போயஸ் கார்டன் என்றதும் எல்லோரது நினைவுக்கும் முதலில் வருபவர் ஜெயலலிதாதான். சென்னை, ராயப்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் சென்று ஜெயலலிதாவின் வீட்டுக்கு செல்ல வலது புறமாக திரும்பும் இடத்தில் இருந்தே எப்போதும் ஒரு வகை பரபரப்பு தொற்றிக் கொள்ளும்.
பிற மாநில முதல்வர்களை போல இல்லாமல் தமிழக முதல்வர்களுக்கு எப்போதுமே பில்ட்-அப் கொஞ்சம் அதிகமாக கொடுக்கப்படும். அது பாதுகாப்பு கான்வாய்களில் இருந்து ஆரம்பித்துவிடும்.

ஜெயலலிதா முதல்முறையாக 1991ல் முதல்வரானபோது, அவருக்கு எதிராக சென்னை மக்களிடம் பெரும் அதிருப்தி அலையே உருவாக காரணம், இந்த பாதுகாப்பு கெடுபிடிகள்தான். சாலைகளில் பல நிமிடங்கள் டிராபிக்கை நிறுத்தி ஜெயலலிதா வாகனம் செல்ல வழி ஏற்படுத்தி கொடுப்பார்கள் போலீசார்.
நிலைமை இப்படி இருக்க, வீட்டை சுற்றிலும் மட்டும் லேசுபட்ட பாதுகாப்பா இருக்கும், அடேங்கப்பா. எத்தனை போலீஸ் அதிகாரிகள் அங்கு முகாமிட்டு, இரவும், பகலும் பாதுகாப்பு கொடுத்தனர் தெரியுமா? இதனால் ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்தே பொதுமக்களுக்கும் பெரும் கெடுபிடிதான்.
அப்பகுதியில் வசிக்கும் வேறு பல பிரபலங்களும் கூட, தங்கள் வீட்டுக்கு செல்வதற்கே ஏகப்பட்ட பாதுகாப்பு கெடுபிடிகளை தாண்டித்தான் பயணிக்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போதும் கூட பாதுகாப்புக்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டே இருந்தனர். இசெட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் இருந்தவர் என்பது அதற்கு மற்றொரு காரணம்.
ஜெயலலிதா அங்கு வசித்து வந்தபோது, அவர் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போதும், வீட்டுக்கு வரும்போதும் அவரை பார்ப்பதற்காக அ.தி.மு.க. தொண்டர்கள் காத்திருப்பார்கள். இதனால் அவர்களை கட்டுப்படுத்த அந்த நேரங்களில் இன்னும் பல போலீசார் குவிக்கப்பட்டிருப்பார்கள்.
இப்படியெல்லாம் பரபரத்த கெடுபிடிமிக்க போயஸ் கார்டன் வேதா இல்லம் பகுதியிலிருந்து தற்போது போலீசார் பெருமளவில் விலக்கிக் கொள்ளப்பட்டு்ள்ளனர். ஜெயலலிதா மறைந்துவிட்டதால் போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இப்போது ஒரு சிலர் மட்டுமே பாதுகாப்பு பணியில் உள்ளனர். தனியார் பாதுகாப்பு ஏஜென்சிகளிடமிருந்து பாதுகாப்பு காவலர்களை பெற்றுள்ளாராம் சசிகலா.
இதனால் போலீஸ் கெடுபிடி, மெட்டல் டிடெக்டர் சோதனைகள் இன்றி அப்பகுதி மக்கள் இனிமேல் சுதந்திரமாக நடமாட முடியும் என்று கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications