நெருங்கி வரும் “டிசம்பர் 6”; சென்னை செண்ட்ரல்- எழும்பூர் ரயில் நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு
சென்னை: இந்தியாவில் வருகின்ற டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தினை அடுத்து சென்னை சென்ட்ரல்-எழும்பூர் ரயில் நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் பாதுகாப்பு கருதி நாடு முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவது வழக்கம். ரயில், பஸ் நிலையங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
அதே சமயத்தில் பாபர் மசூதி இடிப்பு தினம் போன்ற நாட்களிலும் பாதுகாப்பு கருதி போலீசார் அதிகளவில் பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.
மிகப்பெரிய போக்குவரத்து தளம்:
இந்தியாவில் மிகப்பெரிய போக்குவரத்து தளமாக விளங்கும் ரயில் நிலையங்களில் அன்றைய தினம் பாதுகாப்பு பல மடங்கு பலப்படுத்தப்படும். முழு பாதுகாப்பு வளையத்தில் ரயில் நிலையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
தீவிர பாதுகாப்பு பணி:
தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாகவும், சென்னையின் முக்கிய அடையாளமாகவும் விளங்கும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
5 அடுக்கு பாதுகாப்பு:
அந்த வகையில் இந்த ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினம் 6 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை சென்ட்ரல்-எழும்பூர் ரயில் நிலையங்களில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
ரோந்து பணிகள் தீவிரம்:
இதுகுறித்து ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர், "பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சென்ட்ரல்-எழும்பூர் ரயில் நிலையங்களில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. பாதுகாப்பு பணியில் ரயில்வே போலீசார் 300 பேர் ஈடுபட உள்ளனர். மேலும், கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், பைனாகுலர் கருவிகள் மூலமும் ரயில் நிலைய நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக கண்காணிக்க இருக்கின்றனர். சாதாரண உடையிலும் போலீசார் ரோந்து பணியில் செல்ல இருக்கின்றனர்.
சோதனைக்களுக்கு பின் அனுமதி:
சென்ட்ரல் ரயில் நிலையத்தின் "10-11 கேட்", "வி.ஐ.பி. பாயிண்ட்", மூர்மார்க்கெட் பாதை உள்ளிட்ட வாயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட இருக்கின்றனர். அன்றைய தினம் உரிய சோதனைகளுக்கு பின்னரே பயணிகள் தங்கள் உடமைகளை ரயில் நிலையங்களின் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும்:
எழும்பூர் ரயில் நிலையம் முழுவதும் தீவிரமாக சோதனை செய்யும் வகையில் 3 கட்டங்களாக வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட இருக்கிறது. பயணிகள் உடமைகளை சோதனையிட்டதற்கான அடையாளமாக ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட இருக்கின்றன.
பயணிகள் பயப்பட வேண்டாம்:
இந்த 5 அடுக்கு பாதுகாப்பு வருகிற 5 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. 7 ஆம் தேதி இரவு வரை இந்த பாதுகாப்பு நடவடிக்கை அமலில் இருக்கும். எனவே பயணிகள் பாதுகாப்பு குறித்த எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை. முழுமையான பாதுகாப்பு வளையத்துக்குள் சென்ட்ரல்-எழும்பூர் ரயில் நிலையங்கள் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.