தமிழக வெள்ளம் நமக்கு பாடம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு கடனுதவி அளித்து அருண் ஜெட்லி பேச்சு
சென்னை : தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளிலிருந்து, நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அது நம்மை வலிமையான இந்தியா உருவாக்கத்திற்கு துணை புரியும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 1ம் மற்றும் 2ம் தேதி கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. தற்போது மெல்ல மெல்ல மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். ஆனாலும் இன்னும் பல இடங்களில் வெள்ளம் இன்னும் கூட வடியாமல் உள்ளது.
வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வட தமிழகப் பகுதிகளை பிரதமர் மோடி வந்து பார்வையிட்டார். அதன் பின்னர் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் தமிழகம் வந்து ஆய்வு நடத்தினர். அப்போது முதல்வர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சந்தித்து பேசினார்.
இந்நிலையில், வெள்ள சேதம் குறித்த ஆய்விற்காக சென்னை வந்துள்ளார் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி. இன்று காலை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பொதுத்துறை வங்கி சார்பில் தலா ரூ.1 லட்சம் கடனுதவி அவர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து விழாவில் அவர் பேசுகையில், "சென்னைக்கு சவால் மிகுந்த நேரத்தில் வருகைபுரிந்துள்ளேன். ஒரே நேரத்தில், நிவாரண உதவிகள் மற்றும் அடிப்படை உதவிகள் வழங்குவது என்பது சவாலான பணி தான்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளிலிருந்து, நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அது நம்மை வலிமையான இந்தியா உருவாக்கத்திற்கு துணைபுரியும். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் கிடைத்ததா என்பதை வங்கிகள் உறுதிசெய்ய வேண்டும்" என அவர் தெரிவித்தார்.