பங்க் குமார் முதல் 'பர்த் டே' பினு வரை! தெறிக்கவிடும் சென்னை கிரிமினல்களின் கிரைம் ஹிஸ்டரி!! பகுதி-1
Recommended Video
- மெட்ராஸ்காரன்
கொலை; கொள்ளை; ஆள்கடத்தல்; போதைக் கடத்தல்; கட்டப் பஞ்சாயத்து - இந்த ஐந்து விஷயங்களையும் சென்னை மாநகரத்தையும் எப்போதுமே பிரித்துவிட முடியாது. வெள்ளை ரவி, மாலைக்கண் செல்வம், சேரா, பங்க் குமார், வெல்டிங் குமார், அயோத்தியா குப்பம் வீரமணி, ஐஸ் ஹவுஸ் திருநா, ராட்டினம் குமார் என சென்னையைக் கதிகலக்கிய இந்த ரவுடிகள், ஒருகட்டத்தில் போலீஸாரின் துப்பாக்கி தோட்டாக்களுக்கும் கட்டப் பஞ்சாயத்து மோதல்களுக்கும் பலியானார்கள். இவர்களுக்கு அடியாட்களாக வலம் வந்தவர்கள்தான், இன்று சென்னையின் பிரதான ரவுடிகளாகக் கோலோச்சுகின்றனர்.
சென்னை மலையம்பாக்கத்தில் நடந்த போலீஸ் ஆப்ரேஷனில் 72 ரவுடிகள் கொத்தாக அகப்பட்டார்கள். 'போதைக் கடத்தல் புகழ்' பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நடந்த உற்சாகத்தின் விளைவாக ரவுடிகள் சிக்கினார்கள். சென்னையின் கிரைம் வரலாற்றில் ஒரே இடத்தில் இத்தனை ரவுடிகள் பிடிபட்டதில்லை. புழல் சிறையில் இருந்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்தான் இந்த ஆப்ரேஷனை வெற்றிகரமாகச் செய்து முடித்தது காவல்துறை. இதே பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகச் செல்ல இருந்த இரண்டு பிரபல ரவுடிகளுக்குக் காவல்துறையில் இருந்தே போன் போனதால், அப்படியே ஒதுங்கிவிட்டார்கள். அதில் மிக முக்கியமான ஒரு புள்ளிதான் தேனாம்பேட்டை சி.டி.மணி என்கிற மணிகண்டன்.
கொலை, ஆள்கடத்தல், கட்டப் பஞ்சாயத்து என மத்திய சென்னையை மையமிட்டு பிரபலமானவர். கிண்டி, அடையாறு, தி.நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் இவருடைய கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. ஆடி கார், ஆள்பலம் என அரசியல் பிளஸ் காவல்துறை துணையோடு வலம் வருகிறார். சாராயம் குடிக்க வேண்டும் என்று நினைத்தாலே மும்பைக்குச் செல்லும் அளவுக்கு ரவுடிகளின் ராஜ்ஜியத்தில் நம்பர் ஒன்னாக இருக்கிறார்.
திண்டுக்கல் பாண்டியிடம் தொழில் கற்ற மணி
தமிழகத்தைக் கதிகலக்கி வந்த திண்டுக்கல் பாண்டியின் கூட்டத்தில் சிலோன் மோகன் என்பவர் இருந்தார். அவரோடு இணைந்து 'தொழில்' கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் வந்தவர்தான் மணி. போலீஸாரின் தொடர்ச்சியான தேடுதல் வேட்டையும் அதனையடுத்து வந்த நாட்களில் பாண்டி கொல்லப்பட, அவரோடு மோகனும் கைதானார். இருவரும் இல்லாத களத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் மணி. ஒருகட்டத்தில் சிறையில் இருந்து மோகன் வெளியே வரவும், அவரோடு இணக்கமான உறவைக் கொண்டாட முடியாத அளவுக்குத் தனித்துவம் வாய்ந்தவராக மாறிவிட்டார். அவருடைய இந்த வளர்ச்சியை மோகன் ரசிக்கவில்லை. இருவருக்குள்ளும் கடுமையான மோதல் ஏற்பட, ஆம்பூரில் வைத்து மோகனை வெட்டிக் கொன்று புதைத்தார் மணி. இது ரவுடிகள் மத்தியில் மணியின் மீதான அச்சத்தை அதிகப்படுத்தியது. வேளச்சேரி தி.மு.க புள்ளி ஒருவருக்கு எதிராக நில விவகாரத்தில் நேரடியாகக் களமிறங்கினார். இதில் வெடிகுண்டு வீசித் தாக்கும் அளவுக்கு நிலைமை விபரீதமானது. இதில் அந்தப் புள்ளி உயிருடன் தப்பிவிட்டார். அதேபோல், சைதாப்பேட்டையில் பட்டப்பகலில் ஒருவரைச் சுட்டுக் கொன்ற வழக்கிலும் மணியின் பெயரே அடிபட்டது.
பாடம் சொன்ன பங்க் குமார்
மத்திய சென்னையின் மையமாகத் திகழ்வதால் மணியின் பெயருக்கு அரசியல் புள்ளிகள் மத்தியில் தனி இடம் உண்டு. உள்கட்சி விவகாரத்தில் தலைமைக்கு எதிராகக் கொந்தளிப்பவர்களை அடக்குவது; பெரும் புள்ளிகளின் நிலம் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வது; அரசியல்ரீதியாக மேற்கொள்ள வேண்டிய ரகசிய அசைண்மென்டுகளை முடிப்பது; கணக்கில் வராத பணத்தைக் கொண்டு சேர்ப்பது என மணியின் வளர்ச்சி கிராப் உயர்ந்து கொண்டே போகிறது. அனைத்துக் கட்சிகளிலும் அவருக்கான செல்வாக்கு இருப்பதால், யாரைப் பற்றியும் எதையும் கூறாமல் ரகசியத்தைக் கையாள்வதால் மணியை ரொம்பவே நம்புகின்றனர் அரசியல் புள்ளிகள். ' இப்படி நம்பியதால்தான் பங்க் குமார் உள்பட பல பேர் என்கவுண்டர்களுக்கு ஆளானார்கள்' என்ற எச்சரிக்கை அவருக்குள் இருந்தாலும், ' பெரிய இடத்தில் இருப்பவர்கள் தன்னோடு நெருக்கமாக இருப்பதை வெளியால் சொல்லாத வரையில் எந்த ஆபத்தும் இல்லை' என உறுதியாக நம்புகிறார். அதன் எதிரொலியாகத்தான் மணியைத் தேடி வரும் அசைண்மென்டுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
போலீஸ் சோர்ஸ்
அரசியல்வாதிகள் துணை மட்டுமல்லாமல், மணி பெரிதும் நம்புவது காவல்துறையில் உள்ள தன்னுடைய சோர்ஸுகளை. பஞ்சாயத்து பேசப்போகும் இடங்களில் என்ன மாதிரியான விளைவுகள் நடக்கும்? எதிராளி எப்படிப்பட்டவர் என்பதையெல்லாம் கணித்து விளையாடுவதில் இவர் கில்லி. தவிர, காவல்துறைக்கு பெரிதும் வருமானம் வரக்கூடிய பகுதிகளில் தி.நகருக்கும் கிண்டிக்கும் பெரும் பங்கு உண்டு. இந்தப் பகுதிகளில் தங்களுடைய பேச்சைக் கேட்காத ரவுடிகளைப் போட்டுத் தள்ளுவதற்கும் மணியின் தயவை நாடுகின்றனர்.
சகட்டுமே மேனிக்கு சதக் சதக்
' உள்ளூர் ரவுடியைப் போட்டுத் தள்ளுவதற்கு மணி போன்ற ஆள்பலம் உள்ள ரவுடி போலீஸாருக்குத் தேவைப்படுகிறது. மணியின் ஆட்களால் காலி செய்யப்பட்ட லோக்கல் ரவுடிகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது' என்கின்றனர் அவரது எதிராளிகள். அதற்கேற்ப, மணியின் வழக்குகளுக்கும் அவ்வப்போது சின்ன சின்ன உதவிகள் காவல்துறை மூலமாக வந்து சேருகிறதாம். போலீஸார் மேற்கொள்ளும் சீக்ரெட் ஆப்ரேஷன்கள் குறித்த தகவல்கள் எதுவும் மணியின் கவனத்தில் இருந்து தப்பாது. பினு பர்த் டே பார்ட்டியை போலீஸ் குறிவைத்திருக்கும் தகவலை மணிக்குத் தெரிவித்ததும் ஆய்வாளர் ஒருவர்தானாம்.
ராமஜெயம் வழக்கில் விசாரணை
பெரும்பாலும், கொலைகளுக்கான ஸ்கெட்ச் சிறையில்தான் தீட்டப்படுகிறது. தடயம் கண்டறிய முடியாத கொலைகளைப் பற்றி அறிந்து கொள்ள, சிறைத்துறை வளாகத்தில் வலம் வரும் புலனாய்வு போலீஸாரை, காவல்துறை நம்புவது வழக்கம். அவர்கள் மூலமாக சிறைக் கைதிகளிடம் இருந்து பல கொலைகளுக்கான மூலத்தைக் கண்டறிந்திருக்கிறார்கள். அப்படியொரு தகவல் போலீஸாருக்கு வருகிறது. அது என்னவென்றால், ' தேனாம்பேட்டை பகுதியின் ரவுடி சி.டி.மணி, முக்கிய புள்ளியின் நலனுக்காக ராமஜெயம் அசைன்மென்ட்டை செய்து முடித்தார்' என்பதுதான். இதுகுறித்து தீவிர விசாரணையிலும் இறங்கியது சி.பி.சி.ஐ.டி போலீஸ். அப்போது வழக்கு ஒன்றில் சிறையில் அடைபட்டிருந்த மணியிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து எந்தத் தகவலும் கிடைக்காததால், விசாரணையை முடித்துவிட்டனர்.
பங்காளிகளின் வார்னிங்
மத்திய சென்னை கிரிமினல்களின் மனதில் நம்பர் 1 இடத்தில் வலம் வருகிறார் சி.டி.மணி. ' அரசியல் அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஆடிக் கொண்டிருந்த பல ரவுடிகள் அடையாளம் தெரியாமல் அழித்தொழிக்கப்பட்டுவிட்டனர். அந்த வரிசையில் மணிக்கான கால நேரம் என்ன என்பதை அரசியல்வாதிகளே கணிப்பார்கள்' என்கின்றனர் அவருடைய தொழில்முறை பங்காளிகள்.