பங்க் குமார் முதல் பர்த் டே பினு வரை! ரத்தத்தால் கதிகலக்கிய 'கல்வெட்டு' ரவி- பகுதி 4
- மெட்ராஸ்காரன்
அ.தி.மு.க ஆட்சி அமையும்போதெல்லாம் பட்டாசு சத்தம் கேட்பது வழக்கம். பட்டாசு சத்தம் என்பது என்கவுண்டர்களைக் குறிக்கிறது. கடந்த ஓராண்டாக அப்படி எந்த சத்தமும் கேட்கவில்லை. பினுவின் பர்த் டே ஆட்டத்தை அடக்கியதன் மூலம், 'அடுத்து என்ன நடக்கும்?' என்ற கேள்வி ரவுடிகள் மத்தியில் எழுந்துள்ளது.
தொடக்க காலங்களில் நக்சலைட்டுகளில் ஆதிக்கத்தைக் குறைக்க என்கவுண்ட்டர் நடவடிக்கைகளில் போலீஸ் இறங்கியது. 1979-ம் ஆண்டு என்கவுண்ட்டருக்கு ஆளான அப்புவில் இருந்து போலீஸாரின் வேட்டை தொடங்குகிறது. இதன்பின்னர் சுட்டுக் கொல்லப்பட்ட பாலன், நக்சலைட் நாகராஜன், 'ராபின் ஹுட்' ராஜாராம், பங்க் குமார், ஆசைத்தம்பி, மிலிட்ரி குமார், வெங்கடேச பண்ணையார், அயோத்திகுப்பம் வீரமணி, மணல் மேடு சங்கர், குரங்கு செந்தில், வெள்ளை ரவி என இந்தப் பட்டியல் கொஞ்சம் நீளம். ' இதே வரிசையில், என்னையும் என்கவுண்டரில் கொன்றுவிடுவார்கள். எப்படியாவது காப்பாற்றச் சொல்லுங்கள்' எனக் கதறிய ரவிசங்கர் என்கிற கல்வெட்டு ரவியின் கதை இது.
அசர வைத்த குண்டர் சட்டம்!
வியாசர்பாடியில் வாழ்க்கையைத் தொடங்கிய ரவியின் ஆதிக்கம், திருவொற்றியூர் கடற்கரைக் குப்பம் வரையில் பரவிக் கிடக்கிறது. ஒருகாலத்தில் வடசென்னையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த மாலைக்கண் செல்வம் உள்பட ஒரு சிலர் கொடுக்கும் வேலைகளைத் திறம்படச் செய்து வந்தார் ரவி. செல்வத்தின் ஆதிக்கம் குறைந்த பிறகு தன்னை வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ரவி. இதற்கு இடையூறாக வந்தார் எஸ்பிளனேடு நித்தி என்கிற நித்தியானந்தன். இளவயதான நித்தியின் துறுதுறுப்பும் தயங்காமல் செய்யும் காரியங்களும் அரசியல் புள்ளிகள் மத்தியில் தனி இடத்தைக் கொடுத்தது.
ஆறு முறை குண்டாஸ்
இதனை கல்வெட்டு ரவியின் கண்கள் கடுகடுப்புடன் பார்த்து வந்தது. பாரிமுனையில் ஓர் ஓட்டல் கடையின் முன்னால் வைத்தே நித்தியை வெட்டிப் படுகொலை செய்தார் ரவி. இந்த சம்பவத்துக்குப் பிறகு, பெரிய ரவுடிகளே கொஞ்சம் ஒதுங்கிப் போகும் அளவுக்கு மாறிவிட்டார். ஆறு படுகொலைகள் உள்பட 35 வழக்குகள் ரவியின் மீது உள்ளன. கேளம்பாக்கத்தில் வைத்துக் கொல்லப்பட்ட கன்னியப்பன், தண்டையார் பேட்டை வீனஸ் படுகொலை, ராயபுரம் பிரான்சிஸ் படுகொலை, பொக்கை ரவி கொலை, வண்ணாரப்பேட்டை சண்முகம் படுகொலை என ரவியின் கிரைம் ரிக்கார்டு கணக்கில் அடங்காதது. ஆறு முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட பெருமையும் ரவிக்கு உண்டு.
என்கவுண்ட்டர் திட்டம்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கொருக்குப்பேட்டை மாநகராட்சி பள்ளி அருகில் ஏட்டு ஆர்தலிங்கம் என்பவர் ரோந்து பணியில் இருந்தபோது, அந்த வழியாக ஒரு நபர் கத்தியை சொருகிக் கொண்டு போனதைப் பார்த்தாகவும் அவரைப் பிடிக்க முயற்சித்தபோது கத்தியால் குத்திவிட்டதாகவும் கத்தியோடு சென்ற நபர் கல்வெட்டு ரவி என்ற தகவல் வெளியானது. இப்படியொரு தகவலை போலீஸார் வெளியிட்டாலும், ' உண்மை அதுவல்ல' என்கிறார்கள் திருவொற்றியூர் ஏரியாவாசிகள். ரவிக்கும் அவரது எதிர் கோஷ்டி ஆட்களுக்கும் இடையில் பஞ்சாயத்து ஒன்றில் பெரும் மோதல் வெடித்தது. 'ரவியின் ஆட்டத்தை அடக்க வேண்டும்' என சிலரது விருப்பத்தின் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டார். வழக்கில் இருந்து ஜாமீனில் வந்த ரவி, தலைமறைவாகிவிட்டார். இதன்பிறகு ஆந்திராவில் வைத்து தனிப்படை போலீஸார் கைது செய்தனர். ரவியை என்கவுண்டரில் போடுவதற்கான வேலைகளும் நடந்தன. ' அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது' என ரவியின் தாய் நாகபூஷணம் ஸ்டேஷன் வாசலிலேயே கதறியதை போலீஸார் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
நடுக் கடலில் பகீர்
'கிழக்கு கடற்கரைச் சாலையைப் பொறுத்தவரையில் திருவொற்றியூர், விம்கோ நகர், எண்ணூர் பகுதிகளில் ரவுடிகளின் ஆட்டம் அதிகம். தங்களுக்கு ஒத்துவராத ரவுடிகளை ஒழிப்பதில் இருந்து தொழிலதிபர்களைக் கூட்டி வந்து கடலில் வைத்து கலங்கடிப்பது வரையில் அவர்களது பாணியே தனி. சினிமா பிரபலங்களில் தங்களுக்கு ஒத்துழைக்காத நடிகைகளைப் பழிவாங்குவதற்கும் ரவுடிகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் சில தயாரிப்பாளர்கள். இதற்காக நடுக்கடலில் வைத்து இவர்கள் ஆடும் ஆட்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. கந்து வட்டிக் கொடுமையால் நொந்து போய் இருக்கும் தமிழ் சினிமாவில், பணம் தராதவர்களைக் கடத்தி வந்து மிரட்டுவதற்கும் கடற்கரைப் பகுதிகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். கடலில் வைத்தே பத்திரங்களில் கையெழுத்து வாங்கும் வேலைகளும் நடக்கின்றன. இப்படியொரு அவமானத்தை வாழ்வில் பார்த்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு சித்ரவதை செய்கின்றனர். மான அவமானங்களுக்குப் பயந்தவர்கள், தங்களுக்கு நேர்ந்த துயரத்தை வெளியில் சொல்வதில்லை. இந்தவகையான ஆப்ரேஷன்களைக் கையாள்வதில் கைதேர்ந்தவர் கல்வெட்டு ரவி' என்கிறார்கள்.
சிறையில் இருந்து ஆட்டம்
புழல் சிறையில் அடைபட்டிருந்தாலும் தன்னுடைய தொடர்புகள் மூலம் இன்னும் ஆட்டத்தை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார் ரவி. ' சிறையில் என்ன மாதிரியான திட்டங்கள் தீட்டப்படுகின்றன?' என்பதையும் கண்கொத்திப் பாம்பு போல கவனித்துக் கொண்டிருக்கின்றனர் சிறைத்துறையை வலம் வரும் சி.ஐ.டி போலீஸார்.