வேலூர் சிறையில் இருந்தபடியே சென்னையை அதிரவைக்கும் ரவுடி நாகேந்திரன்- பகுதி 7
Recommended Video
சென்னை: வலிமை உள்ளது மட்டுமே எஞ்சும்' என்பது உயிரியல் விதி. இந்த தியரிகள் ரவுடிகள் உலகத்துக்கு ரொம்பவே பொருந்தும்.
ஒருகாலகட்டத்தில் போலீஸாரின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு இரையானாலும், இப்படியொரு ரவுடி வாழ்ந்தான் என்பதை தங்கள் பகுதியில் நிறுவுவதற்கே பலரும் ஆசைப்படுகிறார்கள். எதிர்கால விளைவுகளைப் பற்றியோ, தனக்குப் பின்னால் தன்னுடைய குடும்பத்தின் நிலை என்னவாகும் என்பதைப் பற்றியோ யாரும் கவலைப்படுவதில்லை.
புழல் சிறையில் வைத்தே வெல்டிங் குமார் கொல்லப்பட்டார். எர்ணாவூரைச் சேர்ந்த சின்னஞ்சிறு இளைஞர்களின் கைவண்ணமாக இந்தக் கொலை பார்க்கப்பட்டது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வெல்டிங் குமார் சடலத்தைப் பார்த்து, அவரது மகள் கதறிய கதறல் பல ரவுடிகளை உலுக்கியெடுத்தது.
ஆனாலும், கத்தியை எடுத்தவர்கள் கீழே வைக்க விரும்பினாலும் அது இயலாத ஒன்றாகவே மாறிவிட்டது. இந்த வரிசையில்தான் வியாசர்பாடி நாகேந்திரனும் வருகிறார்.
வியாசர்பாடி நாகேந்திரன்
வடசென்னையைக் கதிகலக்கிய வெள்ளை ரவியின் ஆட்டம் அடங்கிய நொடியில் இருந்து தொடங்குகிறது வியாபர்பாடி நாகேந்திரனின் ராஜ்ஜியம். கொலை, கொள்ளை, மாமூல் மற்றும் செயின் பறிப்பு என பல பெருமைகளைப் பெற்றது வடசென்னை. வியாசர்பாடி, கொடுங்கையூர் பகுதிகளில் ரவுடிகளுக்குள் ஏற்படும் மோதல்களும் அதன் தொடர்ச்சியாக நடக்கும் படுகொலைகளைத் தடுக்க முடியாமல் தவிக்கின்றனர் போலீஸார். மொத்தமாக, பத்து ரவுடி கும்பல்கள்தான் பெரும் தலைவலியாக உருவெடுத்து வருகின்றன. இதில் மிக முக்கியமானவர் வியாசர்பாடி நாகேந்திரன். கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். 'சிறையில் இருந்தபடியே பல சம்பவங்களுக்கு இவர்தான் ஸ்கெட்ச் போட்டுத் தருகிறார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதன்படியே, அவருடைய ஆட்கள் அச்சுப்பிசகாமல் சம்பவங்களை அரங்கேற்றுகிறார்கள்.
சரக்கு லாரிகள் மூலம் வருவாய்
வியாசர்பாடி பகுதியைப் பொறுத்தவரையில், வருமானத்துக்கான முக்கிய கேந்திரமாக கொருக்குப் பேட்டை கூட்ஷெட் திகழ்கிறது. இந்த கூட்செட்டுகளுக்கு வரும் சரக்குகளை லாரி மூலமாகக் கொண்டு செல்வதற்கான மாமூல் மட்டுமே மாதம் இருபது லட்சத்தைத் தாண்டும். மாமூல் போட்டி அதிகரித்ததன் காரணமாகத்தான், ஜெய்சிங் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து வியாசர்பாடி நாகேந்திரனின் தம்பி போஸ் கொல்லப்பட்டார். வெள்ளை ரவிக்குப் பிறகு நாகேந்திரன் வைத்ததுதான் சட்டம். கொலை வழக்கு ஒன்றில் ஆயுள்தண்டனை பெற்ற நாகேந்திரன், வேலூர் சிறையில் தள்ளப்பட்டார். ஆனாலும், தனது ஆதரவாளர்கள் மூலம் தொடர்ந்து கோலோச்சி வருகிறார் நாகேந்திரன்.
தொடரும் படுகொலைகள்
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, கொருக்குபேட்டை கூட்ஷெட் எடுக்கும் ஒப்பந்தத்தில் ஏற்பட்ட தகராறில், இந்திய குடியரசு கட்சியின் சென்னை மாவட்ட தலைவர் பாளையம் படுகொலை செய்யப்பட்டார். முக்கிய தலைகள் எல்லாம் சிறையில் இருக்க, அவரது அடிப்பொடிகள் வாள் வீச்சில் ஈடுபடத் தொடங்கினர். பழிக்குப் பழி தீர்க்கும் படலமாக, தொடர் கொலைகளும் அரங்கேறி வருகின்றன. ஜெ.ஜெ., நகர் ரஞ்சித், ‘பாட்டில்' மணி, காமேஷ், பிரபாகரன், டைசன், பாளையம் என கொலைப்பட்டியலின் எண்ணிக்கையும் நீண்டு கொண்டே போகிறது.
சேரா,வெள்ளை ரவி, நாகேந்திரன்
வடசென்னையில் ஒருகாலத்தில் ரத்த ஆறுகளைத் தெறிக்கவிட்டனர் சேராவும் வெள்ளை ரவியும். இவர்களுக்கு அடுத்தபடியாக நாகேந்திரனின் பெயர்தான் வலம் வருகிறது. பஜாரில் கடை வைத்திருக்கும் புள்ளிகள் மூலம் மாதம்தோறும் அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட கரன்ஸிகள் நாகேந்திரனின் வீடு தேடிப் போகிறது. வெளியில் இருப்பதைவிடவும் ஜெயில் வாழ்க்கையில் அத்தனை சவுகரியங்களும் கிடைப்பதால், தனிக்காட்டு ராஜாவாக வலம் வருகிறார். கொருக்குப்பேட்டை கூட்ஷெட் ஏலமாக இருந்தாலும் ரியல் எஸ்டேட் பஞ்சாயத்தாக இருந்தாலும் நாகேந்திரன் பெயரே உச்சரிக்கப்படுகிறது. கட்டப் பஞ்சாயத்து, சினிமா புள்ளிகளின் கோரிக்கைகள், கடத்தல் விவகாரங்கள் என ஆல் இன் ஆலாக வலம் வருகின்றனர் நாகேந்திரனின் அடிப்பொடிகள்.
பொக்கை ரவி ப்ளஸ் பாலாஜி
பாரிமுனையில் உள்ள கடை ஒன்றில் கூலி வேலை பார்த்து வந்த ரவி, அடிதடி சம்பவங்களில் ஈடுபட்டு பொக்கை ரவியாக மாறிப் போனார். ஒருகாலத்தில் வியாசர்பாடி நாகேந்திரனின் ஆளாக வலம் வந்தவர், பஞ்சாயத்தில் வரும் ஆதாயம் காரணமாக, தனியாக வலம் வர ஆரம்பித்தார். நாகேந்திரனின் பரம எதிரியான காக்கா தோப்பு பாலாஜியின் நட்பும் சேர்ந்துவிட, பொக்கை ரவியின் எல்லை விஸ்தரிக்கப்பட்டது. இதனால், நாகேந்திரனைப் பார்த்து பயந்தவர்கள் பொக்கை ரவியின் மீது அச்சப்படத் தொடங்கினார்கள். பலமுறை நாகேந்திரன் ஆட்களோடு நேரடியாக மோதினார்கள் ரவியின் ஆட்கள். இதனால் கொலைவெறியோடு அலைந்த நாகேந்திரனின் ஆட்கள், ரவியின் ஆட்களைத் தேடிப் பிடித்து சாய்க்கத் தொடங்கினார்கள். இதற்குப் பழிதீர்க்கும்விதமாக நாகேந்திரன் கூட்டாளியான காமேஷ் கொல்லப்பட்டார். காமேஷ் கொலைக்குப் பழிதீர்ப்பதற்காக சூடம் ஏற்றி சபதம் செய்தனர் நாகேந்திரனின் ஆட்கள்.
பழிக்கு பழி கொலை
அதன்படியே, ராயப்பேட்டை மருத்துவமனையில் வைத்து பலபேர் முன்னிலையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் ரவி. கொலைகளில் தனித்துவத்தைக் காட்டிய ரவியும், அவரது பாணியிலேயே படுகொலை செய்யப்பட்டார். ஒவ்வொரு காலகட்டத்திலும் யார் பெரியவர் என்ற போட்டி வடசென்னை ரவுடிகள் மத்தியில் தலைதூக்கும்.
வெறியோடு வலம் வரும் நாகேந்திரன் கோஷ்டி
குறிப்பிட்ட ஒரு பகுதியில் கோலோச்சும் ரவுகள், எல்லை விஸ்தரிப்பில் ஈடுபடும்போதுதான் கொடூரமான கொலைகள் அரங்கேறுகின்றன. ' வெள்ளை ரவிக்குப் பிறகு ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்குகளை சந்தித்து வரும் வியாசர்பாடி நாகேந்திரன், இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில்தான் சிறையில் வலம் வருகிறார். ' சிறையில் இருந்து நாகேந்திரன் வெளியில் வருவதற்குள் போதுமான அளவுக்குச் சேர்த்துவிட வேண்டும்' என்ற வெறியோடு வலம் வருகின்றனர் அவருடைய அடிவருடிகள்.