அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தேர்தல் என்றால் கட்சி தாவழ்கள் இருப்பது வழக்கம். நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் இன்று சென்னையில் எடப்பாடியை பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார். அவருக்கு வெயிட்டான பதவியுடன், தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படவுள்ளதாம்.
நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள். தன்னுடைய அதிரடி பேச்சால் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் வட சென்னை தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது 60,000 வாக்குகள் பெற்றார். அப்போது அவரின் பேச்சுகள் சமூகவலைதளங்களில் வைரலாகின. (NTK Kaliyammal)

நாம் தமிழரில் விலகிய காளியம்மாள்
அரசியல் கட்சிகளில் பெண்கள் அரிதாக தான் தடம் பதிப்பார்கள். காளியம்மாளின் அதிரடி பேச்சும், எளிய பின்னணியும் பாராட்டை பெற்றது. அடிப்படையில் சமூக செயல்பாட்டாளராக இருந்ததால் காளியம்மாள் மக்களின் பிரச்சனைகளை நன்கறிந்திருந்தார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 15,000 வாக்குகளை பெற்று கவனம் ஈர்த்தார்.
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு சுமார் 1,20,000 வாக்குகள் பெற்றார். ஆனால் அந்த தேர்தல் முடிந்ததில் இருந்து காளியம்மாளுக்கும், சீமானுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததால், கடந்த 2025 பிப்ரவரி மாதம் அவர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினார்.
இன்று அதிமுகவில் இணைகிறார்
அவருடன் திமுக, அதிமுக, தவெக, தவாகா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி, தங்கள் கட்சியில் இணைக்க முயற்சி செய்தனர். காளியம்மாள் தவெகவில் இணைகிறார், அதிமுகவில் இணைகிறார் என்று அவ்வபோது தகவல்கள் வெளியாகும். ஆனால் அவர் எந்தக் கட்சியிலும் இணையவில்லை. மாறாக மீனவர் நலன் சார்ந்த அமைப்பை தொடங்க போவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் அவர் அதிமுகவில் இணைவது உறுதியாகிவிட்டதாக தகவல் வெளியாகின. நாகப்பட்டினம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ் மணியன் ஒருங்கிணைப்பில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் காளியம்மாள் இன்று அதிமுகவில் இணைந்தார்.
வெயிட்டான பதவி
காளியம்மாளுக்கு அதிமுகவில் கொள்ளை பரப்பு இணைச்செயலாளர் பதவி கொடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications