சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுவதும் இடிக்க உத்தரவு?
சென்னை சில்கஸ் கட்டடம் முழுவதும் சேதமடைந்த நிலையில் அதை இடிப்பதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என்று தெரிகிறது.
சென்னை: சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுவதும் சேதமடைந்த நிலையில் அதுவாக விழுந்தால் சேதம் அதிகமாக இருக்கும் என்பதால் அதை இடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிகிறது.
தியாகராய நகரில் உள்ள பிரபல துணிக்கடையான தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் நேற்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
9 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முற்பட்டனர். எனினும் தொடர்ந்து தீ கொழுந்து விட்டு எரிந்து வந்தது.
மேலும் 6 வாகனங்கள்
இதைத் தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மேலும் 6 வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இதனிடையே கட்டடத்தின் சுவரில் விரிசல் ஏற்பட்டது. கட்டடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்தது
இந்நிலையில் கரும்புகை உள்ளேயே சூழ்ந்து கொண்டு வெளியேற வழியில்லாததால் கண்ணாடி ஜன்னல்கள் வெடித்து சிதறின. இதைத் தொடர்ந்து கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
மீண்டும் தீ
கட்டடத்தின் 7-ஆவது மாடியில் நேற்று மீண்டும் தீப்பிடித்தது. இதனால் நேற்று நள்ளிரவில் கட்டடத்தின் 2-ஆவது மாடி முதல் 7-ஆவது மாடி வரை சரிந்து விழுந்தது. 400-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முற்பட்டது. இரண்டாவது நாளாக தீ கொழுந்து விட்டு எரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
கட்டடத்தை இடிக்க முடிவு
இந்நிலையில் கட்டடம் தானாக இடிந்து விழுந்தால் பெரிய சேதம் ஏற்படலாம் என்பதால் இதை அதிகாரிகளாவே தகர்க்க முடிவு செய்யலாம் என்று தெரிகிறது. மேலும் அப்பகுதியில் 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.