குழந்தைகளின் கல்விக் கட்டணமும் இல்லை... ஊதியமும் இல்லை... சென்னை சில்க்ஸ் ஊழியர்கள் கதறல்!
சென்னை சில்க்ஸ் கடையில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்விக் கட்டணம் இந்த ஆண்டு கிடைக்காத சூழல் உருவாகிவிட்டதால் ஊழியர்கள் மிகவும் வேதனையில் உள்ளனர்.
சென்னை: சென்னை சில்க்ஸ் கடையில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்விக் கட்டணம், மாத ஊதியம் கிடைக்காத சூழல் உருவாகிவிட்டதால் ஊழியர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
தி சென்னை சில்க்ஸ் என்ற துணிக்கடை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ளன. இக்கடை திநகரில் மிகவும் பிரபலமான கட்டடமாகும். இங்கு துணிக்கடையும் நகைக்கடையும் அருகருகே உள்ளது. இதனால் திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு மக்கள் எங்கு சுற்றி திரியாத படி ஒரே இடத்தில் வாங்கி வந்தனர்.
இந்நிலையில் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸில் நேற்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வந்தனர்.
ஊழியர்கள் அவதி
இந்த கடையில் நெல்லை, மதுரை , தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான ஆண், பெண்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது தீவிபத்து ஏற்பட்டு கட்டடம் முழுவதும் எரிந்துள்ளதால் அவர்களது பணி என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் வீட்டு வாடகை, மின்கட்டணம் உள்ளிட்ட தேவைகளுக்கு என்ன செய்ய போகிறோம் என்று கையை பிசைந்து கொண்டுள்ளனர்.
கல்விக் கட்டணம் ஏற்பு
இந்நிலையில் ஜூன் மாதம் என்பதால் ஆண்டுதோறும் அங்கு பணியாற்றும் ஊழியர்களின் கல்விக் கட்டணத்தை கடை நிர்வாகமே ஏற்கும். இந்த சூழலில் இந்த தொகையும், மாத ஊதியமும் கிடைக்காத சூழல் ஏற்பட்டதால் தங்கள் வாழ்வாதாரம் குறித்து ஊழியர்கள் கதறி அழுதனர்.
பணி என்னாவாகும்?
தற்போது கடை முழுவதும் எரிந்து விட்டதால் இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு சென்னை சில்க்ஸ் கடையின் மற்ற கிளைகளில் பணி வழங்கப்பட்டாலும் குழந்தைகள் சென்னையில் படிக்கும் நிலையில் ஆண்கள் செல்லலாம். ஆனால் பெண் ஊழியர்களால் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக வேலை தேட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு
இந்த தீவிபத்தால் விதிமுறைகளை மீறி கட்டிய சென்னை சில்க்ஸ் பாதிக்கப்பட்டதோடு, சென்னை சில்க்ஸ் கடைக்கு அருகில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ. 50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தி.நகர் வியாபாரிகள் சங்கத் தலைவர் சாரதி தெரிவித்தார்.