கவின்கலைக்கல்லூரி மாணவர் தற்கொலை - உடலை வைத்து உறவினர்கள் போராட்டம்
தற்கொலை செய்து கொண்ட மாணவர் பிரகாஷ் உடலை வைத்து வேலூரில் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: வேலூரில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சென்னை கவின்கலைக்கல்லூரி மாணவர் பிரகாஷ் உடலை வைத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் அடுக்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் பிரகாஷ்,வயது 24. சென்னை எழும்பூரில் உள்ள கவின் கலைக் கல்லூரியில் படித்து வந்தார்.

பிரகாஷ் அடுக்கம்பாறையில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தார். புதன்கிழமையன்று அடுக்கம்பாறை அருகே உள்ள குழவிமேடு பகுதிக்கு சென்ற அவர், அங்குள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய பிரகாஷின் உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுபற்றி வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், விரைந்து வந்து மாணவன் பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து மாணவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மாணவர் தனது மரணத்திற்கு முன்பாக செல்போனில் வாக்குமூலம் அளித்துள்ளார். தனது மரணத்திற்குக் காரணம் துறைத்தலைவர் கொடுத்த டார்ச்சரே காரணம் என்று கூறினார். மாணவர் பிரகாஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். பின்னர் முதல்வரின் சமாதானத்தை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதனிடையே மாணவரின் உடலை வைத்துக்கொண்டு உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.












Click it and Unblock the Notifications