"மெட்ராஸ் நம்ம மெட்ராஸ்".. 375வது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகும் சென்னை!
சென்னை: பட்டணம் என்று அக்காலம் முதல் இன்று வரையிலும் செல்லமாக அழைக்கப்படும் சென்னை மாநகருக்கு 375வது பிறந்த நாள் வந்துள்ளது. இதையொட்டி ஆகஸ்ட் 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஒன்பது நாட்களுக்கு அமர்க்களமான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊருக்கே சோறு போட்ட குடும்பம்டா இது என்று சில சினிமாக்களில் வசனம் வருவதைப் பார்த்துள்ளோம். அதுபோல ஒரு காலத்தில் நம்மைச் சுற்றிலும் தனித் தனி மாநிலமாக பிரிந்து போய் விட்ட கர்நாடகம், ஆந்திரா என அக்கம் பக்கத்து மாநிலங்களுக்கும் தலைநகரமாக திகழ்ந்த பெருமை கொண்டது சென்னை.
இப்படிப்பட்ட பெருமை கொண்ட சென்னை நகரம், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரமாகும். அப்படி உருவாகி 375 ஆண்டுகள் ஆவதையொட்டி விழா எடுத்துக் கொண்டாடவுள்ளனர்.
சென்னைப்பட்டனம்
சென்னப்பட்டனம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது இன்றைய சென்னை. ஆங்கிலேயர்கள் வந்து இதை மெட்ராஸ் என்றும் ஆக்கி விட்டுப் போனார்கள்.
கோட்டையை சுற்றி
1639ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் சென்னை நகரம் வியாபித்து வளர ஆரம்பித்தது.
ஆகஸ்ட்டில் பிறந்த சென்னை
சென்னை நகரை கிழக்கு இந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே என்பவர் 1639ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விலைக்கு வாங்கிப் பதிவு செய்துள்ளார். அப்போதுதான் முதல் முறையாக சென்னை என்ற பெயர் அந்தப் பத்திரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த தினத்தையே சென்னையின் பிறந்த தினமாக கொண்டாடி வருகிறார்கள்.
மெட்ராஸ் சென்னையாக மாறியது
ஆங்கிலேயர் காலத்தில் சென்னையை மெட்ராஸ் என்று சுருக்கி அழைத்து வந்தனர். இதுவே பின்னர் தமிழர்கள் நாவிலும் நடமாடத் தொடங்கியது. ஆனால் 1996ம் ஆண்டு அரசு சென்னை என்பதையே ஆங்கில பயன்பாட்டுக்கும் மாற்றி உத்தரவிட்டது.
375வது பிறந்த நாள் விழா
தற்போது சென்னை தோன்றி 375 ஆண்டுகள் ஆவதால் அதை மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்ற பெயரில் சென்னை வாரமாக கொண்டாடவுள்ளனர்.
9 நாட்களுக்கு
ஆகஸ்ட் 17ம் தேதி முதல் ஆகஸ்ட் 25ம் தேதி வரை 9 நாட்களுக்கு இந்தக் கொண்டாட்டம் நடைபெறும்.
கலை நிகழ்ச்சிகள்
இதுகுறித்து விழா அமைப்புக் குழுத் தலைவர் முத்தையா கூறுகையில், மெட்ராஸ் வீக் எனப் படும் சென்னை வாரத்தை முன்னிட்டு 9 நாட்களும் 17 வகையான, 100க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். இசை, திரைப்படம், சொற்பொழிவு, பாரம்பரிய இடங்கள், பசுமைச் சாலைகளை காண்பதற்கான நடைபயணங்கள், கண்காட்சிகள், உணவுத்திருவிழா நடைபெறும்.
ஆர்மீனியர்கள் குறித்த கண்காட்சி
சென்னையில் வணிகம் செய்த ஆர்மீனியர்கள் குறித்த கண்காட்சி பாரிமுனையில் உள்ள ஆர்மீனியன் தேவாலயத்தில் நடைபெறும். மேலும் எம்டன் கப்பல் சென்னை மீது குண்டு வீசி 100 ஆண்டுகள் ஆனதையொட்டி ஆஸ்திரேலிய தூதரகத்தின் உதவியுடன் புகைப்பட கண்காட்சி நடத்த உள்ளோம். இந்த நிகழ்ச்சிகள் நடத்த சென்னையில் உள்ள முக்கிய சங்கங்கள் முன்வந்துள்ளன. நிகழ்ச்சிக்கான செலவினங்களை பல்வேறு நிறுவனங்கள் ஏற்றுள்ளன. இணையதளம், முகநூல் மூலமாக நிகழ்ச்சிகள், நடைபெறும் இடங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம் என்றார் அவர்.