சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது!
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உல்லாசத்திற்கு வர மறுத்த இளம் பெண்ணை அடித்துக் கொன்ற முதியவரை போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி காமாட்சி (28). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த மகேந்திரனுக்கும் (64) பணம் கொடுக்கல் வாங்கலில் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மகேந்திரன், ஒரு மாதத்திற்கு முன்பு அந்த பெண்ணை காட்டுமன்னார்கோவிலுக்கு வர சொன்னாராம். அப்போது அந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த காமாட்சி, மகேந்திரனை செருப்பால் அடித்து வீடியோ எடுத்துள்ளார். மேலும் அவருடைய உறவினர்களுக்கு அந்த வீடியோவை அனுப்பிவிடுவதாக காமாட்சி மிரட்டியதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த வீடியோவை காமாட்சி வாட்ஸ் ஆப்பில் அனுப்பினாராம். இது மகேந்திரனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனே கடுங்கோபத்துடன் காமாட்சியின் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவரை அங்கிருந்த கட்டையை கொண்டு கடுமையாக தாக்கினாராம். இதனால் பலத்த காயமடைந்த காமாட்சி அதே இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
ஆனாலும் ஆத்திரம் தீராத மகேந்திரன் அங்கிருந்த காமாட்சியின் தந்தை பாண்டுரங்கனையும் கட்டையால் அடித்ததாக தெரிகிறது. அதில் அவர் படுகாயமடைந்தார். உடனே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று காமாட்சியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து காமாட்சியின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் மகேந்திரனை போலீஸார் கைது செய்தனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கடலூர் மாவட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். உல்லாசத்திற்கு வர மறுத்த பெண்ணை முதியவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications