இளங்கோவன் அறிக்கை மிகுந்த வருத்தம் தருகிறது: ப.சிதம்பரம் ஆதரவாளர்கள்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்ட அறிக்கை மிகவும் வருத்தத்தை தருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ஜெயந்தியைப் போலவே, கட்சியில் இருந்து இன்னொருவர் தன்னுடைய மகனுடன் வெளியேறினால் காங்கிரஸ் கட்சிக்கு விமோசனம் கிடைக்கும்' என இளங்கோவன் குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கனவே, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கும், இளங்கோவனுக்கும் மோதல் உள்ள நிலையில், இளங்கோவன் மறைமுகமாகக் கூறியிருப்பது அவரைத் தான் எனக் கூறப்பட்டது.
இது தொடர்பாக சிதம்பரம் டெல்லி சென்று ராகுலைச் சந்தித்து முறையிட்டார். காங்கிரஸ் தலைவர் சோனியாவும் இளங்கோவனைப் போனில் அழைத்து கண்டித்தார். இதற்கிடையே, இளங்கோவனைக் கண்டித்து கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள் போஸ்டர்களும் ஒட்டினர்.
இந்த சூழ்நிலையில், நேற்று கார்த்தி ப.சிதம்பரம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ரகசிய கூட்டம் நடத்தியதாக செய்தி வெளியானது. இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களான மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், முன்னாள் எம்.பி.க்கள் வள்ளல்பெருமாள், கே.எஸ்.அழகிரி உள்பட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கையெழுத்திட்டு, கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :-
சமீபத்தில் நடைபெற்ற சில நிகழ்வுகள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மூலமாக வெளியிடப்பட்ட சில அறிக்கைகள் ஆகியவை மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளித்துள்ளது. இவற்றை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கருத்தில் கொண்டு இவை ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று அறிவுரை வழங்கியிருப்பதாக செய்தித்தாள்களில் படித்தோம். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நடவடிக்கை எங்களுக்கு ஆறுதல் தந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமைக்காகவும், வளர்ச்சிக்காகவும், எங்களுடைய உழைப்பையும், பங்களிப்பையும் தருவதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். கட்சியில் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரையும் கலந்து, அரவணைத்து கட்சியின் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications