அட. ப.சிதம்பரமும் இந்தி திணிப்பை எதிர்க்கிறார்
சென்னை: சமூக வலைதளங்களில் இந்திக்கு முன்னுரிமை கொடுங்கள் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக தமிழகத்தில் ஒருமித்த எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. திமுக, அதிமுக, பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தொடர்ந்து காங்கிரஸும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் ஆங்கிலத்தை விட இந்தி மொழிக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரமும் கூட இந்தி திணிப்புக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், மோடி அரசின் உத்தரவு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும். இந்தி பேசாத மாநிலங்களை குறிப்பாக தமிழகத்தை பின்னடைய செய்துவிடும் என்று எச்சரித்துள்ளார்.