வடக்கில் இருப்பவர்கள் கடலில் குதி என்றாலும் முதல்வர் குதித்துவிடுவார்.. தினகரன் தாக்கு!
மத்திய அரசு என்ன ஆணையிடுகிறதோ அதனை நிறைவேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தயாராக இருக்கிறார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: மத்திய அரசு என்ன ஆணையிடுகிறதோ அதனை நிறைவேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தயாராக இருக்கிறார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விடுமுறை நாளான நேற்று ஆர்கே நகரில் பிரச்சாரம் படுஜோராக நடைபெற்றது. ஆர்கே நகரின் ஐஓசி பகுதியில் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.
முதல்வர் மீது தினகரன் விமர்சனம்
ஆர்.கே.நகர் தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என அவர் கூறினார். மேலும் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மக்களை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தைரியமில்லை என்றும் டி.டி.வி.தினகரன் விமர்சனம் செய்தார்.
முதல்வர் தயாராகி இருக்கிறார்
மத்திய அரசு என்ன ஆணையிடுகிறதோ அதனை நிறைவேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தயாராக இருக்கிறார் என்றும் கூறினார். டைரி என்று கூறினாலே முதல்வர் பயப்படுகிறார் என்றும் தினகரன் தெரிவித்தார்.
அஞ்சுகிறார் முதல்வர்
தனது உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தனக்கும் ஆபத்து வந்துவிடுமோ என அவர் அஞ்சுவதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்தார். இதன் காரணமாக முதல்வர் வடக்கு பார்த்து கும்பிட்டப்படி இருக்கிறார் என்றும் அவர் சாடினார்.
கடலில் குதித்து விடுவார்
டெல்லியில் இருப்பவர்கள் கடலில் குதி என்றாலும் முதல்வர் அதனை உடனடியாக செய்து விடுவார் என்றும் டிடிவி தினகரன் விமர்சித்தார். ஆர்கே நகர் இடைத்தேர்தல் நெருங்குவதையொட்டி வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.