மேட்டூர் அணையில் நீர் திறக்கிறார் எடப்பாடியார்.. முதல்வர் பங்கேற்பது இதுவே முதல்முறை!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் கடந்த மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. தொடங்கியது முதலே கனமழை கொட்டித்தீர்ப்பதால் அங்குள்ள அணைகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.
இதனால் கர்நாடக அணைகளில் இருந்து ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

கிடுகிடுவென உயரும் நீர்மட்டம்
நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது. நேற்று வரை 90 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 95 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணை திறப்பு
இந்நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் நாளை மறுநாள் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். இதற்காக சம்பா சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் உரங்களை இருப்பு வைக்கவும் அவர் நேற்று உத்தரவிட்டார்.

அணையை திறக்கிறார் முதல்வர்
இந்நிலையில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் மேட்டூரில் நடைபெறும் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் செல்லவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவே முதல்முறை
தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். இதனிடையே மேட்டூர் அணையில் இருந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறக்கப்படவுள்ளதால் காவிரி பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications