களை கட்டுகிறது திருப்பரங்குன்றம் .. 11ம் தேதி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் எடப்பாடி பழனிச்சாமி
11-ந் தேதி திருப்பரங்குன்றம் வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
சென்னை: வருகிற 11-ந் தேதி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி உரை நிகழ்த்த உள்ளார்.
அரசியல் களம் தற்போது பரபரப்பாகி உள்ளது. குறிப்பாக ஆளும் தரப்பு சுறுசுறுப்படைந்து வருகிறது. இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், மற்ற கட்சிகள் களப்பணியில் இறங்கிவிட்ட நிலையில் அதிமுக சுணக்கமாக காணப்பட்டதாக கூறப்பட்டது.
[ ஓ.பன்னீர்செல்வம் பிரஸ் மீட்டால் மேலும் சந்தேகம் அதிகரிப்பு! ]
திருப்பரங்குன்ற இடைத்தேர்தல்
ஆனால் இரு தினங்களாக அதிமுக அதிரடியில் இறங்கி கொண்டிருக்கிறது. முதல்வரும், துணை முதல்வரும் இதற்கான முதற்படியினை எடுத்து வைத்திருக்கிறார்கள். செய்தியாளர்கள் சந்திப்பு, ஆளுநர் சந்திப்புகளை அடுத்து, தற்போது திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளார்கள்.
50 வாக்கு வித்தியாசம்
நேற்று முன்தினம் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக ஜெயித்தே தீரும் என்றார். இதனையடுத்து, வருகிற 11-ந் தேதி மீண்டும் முதலமைச்சர் மதுரை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம்
அன்றைய தினம் காலை 10 மணியளவில் மாட்டுத்தாவணியில் கட்டப்பட்டுள்ள பழ மார்க்கெட்டை திறந்து வைக்க உள்ளார். அதே நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க இருக்கிறார். அன்றைய தினம் மாலை 6 மணியளவில் திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடாடு ஆகி உள்ளது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி உரை நிகழ்த்த உள்ளார். இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 15 தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சூடாகும் களம்
எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்பதை இன்னும் ஆணையம் முடிவு செய்யவில்லை. ஆனாலும், திருப்பரங்குன்றம் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதி என்பதாலும், ஆர்கே.நகர் போன்ற ஒரு தோல்வி இனி வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், அதிமுகவினரும் முழுவீச்சு களப்பணிக்கு முடுக்கி விடப்பட்டுள்ளனர். ரெட் அலார்ட்.. கொட்டும் மழை... நடுங்கும் குளிரிலும் ஆளும் தரப்பு அரசியல் களத்தை சூடாக்கி வருகிறது.