அவர் சொல்ற பேச்ச கேட்காதீங்கன்னு சேலம் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு- கொதிக்கும் செம்மலை!- வீடியோ
அதிகாரிகள் யாரும் என் பேச்சைக் கேடக் கூடாது என முதல்வர் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார் என ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ செம்மலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம்: 'செம்மலை சொன்னால் எந்த வேலைகளையும் செய்யக் கூடாது' என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை குற்றம்சாட்டியுள்ளார்.
ஒபிஎஸ் கோஷ்டியின் ஆதரவாளர் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை. அதிமுகவின் இருகோஷ்டிகளும் இணையும் என்ற எதிர்பார்ப்பு தவிடுபொடியாகி, பேச்சுவார்த்த்தை இழுபறியாகிவிட்டது.
இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ செம்மலை, 'நான் சொன்னால் எந்த வேலையும் செய்யக் கூடாது என அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு போட்டுள்ளார். தொகுதியில் நான் வளர்ச்சிப் பணிகள் செய்து நல்ல பெயர் சம்பாதிக்கக் கூடாது என முதல்வர் நினைத்துத்தான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்' என பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், 'மேட்டூர் பகுதி அதிமுகவினரிடம் இரு கோஷ்டிகளும் இணைவது குறித்துக் கேட்டதற்கு, அவர்கள் இணைய வேண்டாம் என சொன்னதாகவும் அந்தத் தகவலை முன்னாள் முதல்வர் ஒபிஎஸ்ஸிடம் தெரிவிப்பேன்' எனவும் கூறினார்.
கடந்த ஒரு வாரமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரும் ஒபிஎஸ் தரப்பினரும் ஒருவர் மேல் ஒருவர் ஏதாவது ஒரு குற்றச்சாட்டைக் கூறிக்கொண்டே வருகின்றனர். இது தொண்டர்கள் மத்தியில் அயர்ச்சியையும் சலிப்பையும் உருவாக்கி வருகிறது.