பேத்தி வயது சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர்- ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
சென்னை: 13 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஜாமீனே வழங்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் பள்ளத்துரைச் சேர்ந்தவர் மெய்யப்பன் 59 வயதானவர்.
இவரது பக்கத்து வீட்டில் கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவர் குடியிருந்து வருகிறார்.
தனியாக இருந்த சிறுமி:
கூலி வேலை பார்க்கும் இந்தப் பெண்ணுக்கு 13 வயதில் மகள் ஒருவர் உள்ளார். பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்ட இச்சிறுமி, தாய் வேலைக்குச் செல்லும் நேரத்தில் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.
ஆசை காட்டி மோசம்:
தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் மிட்டாய் மற்றும் சாப்பாடு வாங்கித் தருவதாக கூறி மெய்யப்பன் கடந்த 2012 நவம்பர் மாதம் முதல் இச்சிறுமியைத் தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
கர்ப்பமான சிறுமி:
இதில் சிறுமி கர்ப்பமடைந்தார். சிறுமியின் தோற்றத்தில் சந்தேகம் கொண்ட தாய் மருத்துவமனையில் சோதித்தபோது தம் மகள் கர்ப்பமாக இருப்பது அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
முதியவர் செய்த வேலை:
அதன்பின்னர் மகளிடம் விசாரித்தபோது பக்கத்துவீட்டு முதியவர் தாய் இல்லாத நேரங்களில் செய்துவந்த அநியாயம் தெரியவந்தது. இது குறித்து கொத்தமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து மெய்யப்பன் மீது சிறுமியைப் பலாத்காரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஜாமீன் கோரி மனு:
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி மெய்யப்பன் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். விசாரணையின் பின்னர் அவரின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
வெட்கப்படவேண்டிய செயல்:
நீதிபதி வழங்கிய தீர்ப்பில், "13 வயது சிறுமியை 59 வயது முதியவர் பாலியல் கொடுமை செய்தது என்பது வெட்கக்கேடானது. இது அவமானகரமான செயல். இது போன்ற வழக்கில் யாருக்கும் முன்ஜாமீன் வழங்கக் கூடாது.
தள்ளுபடி செய்த நீதிபதி:
தண்டனை வழங்கினால்தான் இது போன்ற சம்பவங்களில் யாரும் ஈடுபடமாட்டார்கள். எனவே இவருக்கு முன்ஜாமீனோ, ஜாமீனோ வழங்கக் கூடாது. இந்த வழக்கை கீழ் நீதிமன்றம் விரைந்து முடிக்க வேண்டும். எனவே முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டார்.