கண்டாங்கி பட்டுடுத்தி மதுரை புறப்பட்டார் கள்ளழகர்: நாளை எதிர்சேவை
மதுரை: வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி தருவதற்காக கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் நேரிக் கம்புடன் பக்தர்களின் "" கோவிந்தா'" கோஷம் முழங்க தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார் சுந்தரராஜபெருமாள்.
மதுரை வரும் அழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைத்து வரவேற்கும் எதிர்சேவை செவ்வாய்க்கிழமை அதிகாலை மூன்று மாவடியிலும், மாலையில் மாநகராட்சி அண்ணா மாளிகை நடைபெறுகிறது..
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா, தேரோட்டத்துடன் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து, ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்துக்காக அழகர்மலையிலிருந்து கள்ளழகர் திங்கள்கிழமை மாலை புறப்பட்டார்.

அழகர்மலை திருவிழா
திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அழகர் கோவிலிலுள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சித்திரை பெருந்திருவிழாவாகும். தமிழ்நாட்டில் நடைபெறும் திருவிழாக்களில் இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த விழா கடந்த 10-ந் தேதி மாலையில் 6 மணிக்கு தொடங்கியது.

தங்கப்பல்லக்கில் அழகர்
இன்று 12-ந்தேதி திங்கட்கிழமை மாலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் தங்கப்பல்லக்கில் சுந்தரராஜபெருமாள் மதுரைக்கு புறப்பட்டார். தொடர்ந்து வழி நெடுகிலும் உள்ள மண்டபங்களில் சுவாமி எழுந்தருள்வார். அப்பன்திருப்பதியில் இரவு 12 மணிக்கு காட்சி தருகிறார்.

மூன்று மாவடியில் எதிர்சேவை
13-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு மேல் மூன்று மாவடியில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறும். அழகர் வேடமிட்ட பக்தர்களும், பொதுமக்களும் பெருமாளை வரவேற்பர். சர்க்கரைக் கிண்ணத்தில் நெய்தீபம் ஏற்றி கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் எழுப்பும் முழக்கம் விண்ணை முட்டும்.

தல்லாக்குளத்தில் ஓய்வு
வழிநெடுகிலும் பக்தர்களின் வரவேற்பினையும், காணிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளும் பெருமாள் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் சற்று ஓய்வெடுக்கிறார்.

ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை
செவ்வாய்கிழமை இரவு 12 மணிக்கு திருமஞ்சனமாகி தங்கக் குதிரை வாகனத்தில் அமர்கிறார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலையை அணிந்து பக்தகோடிகளுக்கு கள்ளழகராக காட்சியளிக்கிறார். திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 14-ந்தேதி (புதன்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கருப்பணசுவாமி கோவில் முன்பு ஆயிரம் பொன்சப்பரம் நிகழ்ச்சி நடைபெறும்.

வைகையில் எழுந்தருளும் அழகர்
புதன்கிழமை காலை 6 மணிமுதல் 6.30 மணிக்குள் வைகையாற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்கி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கிறார். அன்று பிற்பகல் 2 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் அங்க பிரதட்சணம் நடைபெறும். அன்றிரவு வண்டியூர் பெருமாள் கோவிலில் தங்குகிறார்.

மாண்டூக முனிவருக்கு விமோசனம்
தொடர்ந்து 15-ந்தேதியன்று காலையில் திருமஞ்சனமாகி ஏகாந்த சேவை நடைபெறும். தொடர்ந்து தேனூர் மண்டபத்தில் மாலை 3 மணிக்கு கருட வாகனத்தில் பிரசன்னமாகி பெருமாள் மாண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார்

தசாவதாரக் காட்சி
பின்னர் இரவு 11மணிக்கு மேல் ராமராயர் மண்டபத்தில் விடியவிடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெறும்.16-ந்தேதி அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்தில் சுவாமி புறப்பாடு.

மலைக்கு புறப்படும் அழகர்
17-ந்தேதி சனிக் கிழமை அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் மன்னர் சேதுபதி மண்டபத்தில் அழகர் காட்சி தருவார். காலை 11 மணிக்கு கள்ளழகர் திருமாலிருஞ்சோலைக்கு வழிநடையாக புறப்பட்டுச் செல்கிறார்.

போக்குவரத்து மாற்றம்
கள்ளழகர் எதிர்சேவை மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் விழா ஆகியவற்றை முன்னிட்டு, மதுரை நகரில் செவ்வாய்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.என்று மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி மறுப்பு
அழகர் ஆற்றில் இறங்கும் நாளான மே 14 ஆம் தேதி அதிகாலை 3 மணியிலிருந்து அருள்மிகு கள்ளழகர் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கி, ராமராயர் மண்டபத்துக்கு செல்லும் வழியிலும், ஏ.வி.மேம்பாலம், யானைக்கல், புதுப்பாலம் வழியாக எந்த வாகனமும் அனுமதிக்கப்படமாட்டாது.

தற்காலிக பேருந்து நிறுத்தங்கள்
பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் சிம்மக்கல் ரவுண்டானா மற்றும் கீழவாசல் சந்திப்பு ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓபுளா படித்துறை வைகை தென்கரைப் பகுதி மற்றும் வைகை வடகரைகளில் கார் மற்றும் இதர வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை. தென்கரையிலிருந்து எந்த வாகனமும் வைகை வடகரைக்கு வரக்கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications