வேலூர் ஆட்சியர் கார் மோதி இளைஞர் சாவு- பொதுமக்கள் சாலை மறியல்!!
சென்னை: வேலூர் ஆட்சியர் நந்தகோபால் சென்ற கார் இரு சக்கர வாகனம் மீது மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகோபாலின் நேற்று இரவு திருவலம்-காட்பாடி சாலையில் சேவூர் பாலம் அருகே வந்தது. அப்போது சேவூரில் இருந்து காட்பாடி-திருவலம் சாலைக்கு திரும்பிய இரு சக்கர வாகனத்துடன் ஆட்சியரின் கார் மோதியது.

இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த காரணாம்பட்டு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வளர்மதி காசியின் மகன் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த அவரது நண்பர் உதயகுமார் பலத்த காயமடைந்தார்.
இந்த விபத்தில் ஆட்சியர் காரின் முன்பகுதி சேதமடைந்தது. காருக்குள் அமர்ந்திருந்த ஆட்சியர் இரா.நந்தகோபாலுக்கு நெற்றியிலும், கையிலும் காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக அதே காரில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
உயிரிழந்த ராஜ்குமார் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்ததாகவும், பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உதயகுமார், சென்னை பூந்தமல்லியில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் பணிபுரிவதாகவும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று பொதுமக்களை சமாதானம் செய்தனர்.












Click it and Unblock the Notifications