வைகோவுடன் மோதிய சப்–இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
விருதுநகர்: அருப்புக்கோட்டையில் வைகோவுடன் மோதலில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விருதுநகரில்-அருப்புக்கோட்டை சாலையில் வைகோ நேற்று காரில் சென்றார். ம.தி.மு.க. நிர்வாகிகள் மற்றொரு வேனில் அவரை பின்தொடர்ந்தனர். வழியில் தேர்தல் அதிகாரிகள், வைகோவின் காரை நிறுத்தினர். ம.தி.மு.க. நிர்வாகிகள் அதிகாரிகளிடம் சென்று பேசினர்.

அப்போது அவர்களுடன் இருந்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர், மதிமுகவினரை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனை கண்டித்து வைகோ மற்றும் ம.தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய வைகோ, நான் காவல்துறையை மிகவும் மதிப்பவன். மனிதர்கள் என்ற முறையில் அவர்களுக்கு மிகுந்த மரியாதை அளிப்பவன். ஆனால் தேர்தல் பறக்கும் படை அதிகாரியும் காவல்துறை துணை ஆய்வாளருமான ராமகிருஷ்ணன் எங்களது காரை நிறுத்தினார்.
எனது தொண்டர்கள் காரில் வைகோ இருப்பதாக தெரிவித்தனர். அதனைக் கேட்ட அவர் யாருடா சத்தம் போட்டது. அவனை அடித்து காரில் இருந்து இறக்குடா என பண்பற்ற வார்த்தைகளை பேசினார்.
அவரது பண்பாடற்ற இந்த செயலை மக்களுக்கு தெரிவிக்கவே நான் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினேன் என்றார். அப்போது அதிகாரிகள் வந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, அனுப்பிவைத்தனர்.
இதற்கிடையே வைகோவுடன் மோதலில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications