தினகரன் ஆதரவாளராக இருந்த தளவாய் சுந்தரம் ஈபிஎஸ் அணிக்கு மாறியது எப்படி தெரியுமா?
டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்த தளவாய் சுந்தரம் நேற்று எடப்பாடி அணி கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றது பரபரப்பானது. ஆனால் அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பாகவே அணி மாறிவிட்டாராம்.
Recommended Video
சென்னை: டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்த தளவாய் சுந்தரம் திடீரென எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு மாறியது எப்படி என்றுதான் பலரும் கேட்டு வருகின்றனர். எல்லாம் அரசு பதவி செய்யும் மாயம்தான் என்கின்றனர்.
டி.டி.வி. தினகரனுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் தளவாய் சுந்தரம் கடந்த மார்ச் மாதம் தினகரனால் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். தினகரனுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முரண்பட ஆரம்பித்தாரோ அன்றிலிருந்தே தளவாய் சுந்தரம், தினகரன் ஆதரவாளராகவே செயல்பட்டு வந்தார்.
தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி என்ற பொறுப்பில் அவர் இருக்கும் தளவாய் சுந்தரம் தினகரனுக்குச் சில டெல்லி தொடர்புகளை வலுவாக்கும் வேலைகளையும் செய்து வருவதாக முதல்வருக்கு டெல்லியில் இருந்து தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி என்ற இடத்தில் தினகரனின் ஆதரவாளர் இருப்பது சரியாக இருக்காது என்று கருதிய முதல்வர். அதனால் அவரை மாற்ற முடிவெடுத்து அவருக்குப் பதிலாக ஓ.பன்னீரின் ஆதரவாளரான கே.பி.முனுசாமியை நியமிக்க தீர்மானித்தாராம்.
இந்த சூழ்நிலையில்தான் தன்னுடனே இருந்து கொண்டு தனக்கு எதிராக ஐடியாக்களை கொடுத்து வருகிறார் தளவாய் சுந்தரன் என்று தளவாய் சுந்தரத்தின் மீது சந்தேகப்பட்டாராம் தினகரன். அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையின் போதும், அமைச்சர்கள் பற்றி பேசும் போதும் தினகரன் சார்பாக முதல்வரிடம் பேச வந்தவர் தளவாய் சுந்தரம்தான்.
அப்போது தினகரன் ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி பற்றி பேசினாரோ இல்லையோ, தனது டெல்லி மேலிட பிரதிநிதி பதவி பற்றிதான் அதிகம் பேசியதாக தெரிகிறது. எனவேதான் தளவாய் சுந்தரம் அணிமாறுவரை உணர்ந்து அவரை தவிர்த்தாராம் தினகரன்.
தளவாய் சுந்தரத்தின் மகள் திருமண நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்ற டிடிவி தினகரன், அவரது மகளின் திருமண விழாவிலோ, வரவேற்பு நிகழ்ச்சியிலோ பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் மகளின் திருமண வரவேற்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று சிறப்பித்தார்.
இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி மேலிட பிரதிநிதி என்ற பதவியும் தப்பியது. முகாம் மாறிவிட்டதாலேயே பொதுக்குழு கூட்டத்திற்கு தளவாய் சுந்தரத்திற்கு அழைப்பு அனுப்பப்பட்டது அவரும் பங்கேற்றார் என்கின்றனர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர்.