மிதக்கும் மாநகரம்... லேட்டாக ஆலோசிக்கும் முதல்வர்... வெள்ளம் வரும் முன் அணை போட வேண்டாமா?
சென்னையில் பருவமழை வெளுத்து வாங்கி வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பருவமழை பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
வெள்ளம் வரும் முன் அணை போடுங்கள் என்பார்கள். ஆனால் வெள்ளம் வந்த பின்னர்தான் தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனையே நடக்கிறது. 2015 ஆம் ஆண்டு வந்த பெரு வெள்ளத்தை பார்த்த பின்னரும் இன்னமும் யாரும் பாடம் கற்கவில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
2015 ஆம் ஆண்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை யாராலும் மறக்க முடியாது. அதே போல கடந்த ஆண்டு சென்னை வதம் செய்த வர்தா புயலை மறக்கவே முடியாது. அதை எல்லாம் கடந்து வந்தவர்கள்தான் சென்னைவாசிகள்.
அதை எல்லாம் பாடமாக வைத்து வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்திய போது எல்லாமே என்று கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அமைச்சர்களும் அதையே வழிமொழிந்தனர்.
இதோ மழை வந்து விட்டது. ஆனால் வெள்ளம் சூழ்ந்த மக்களை பாதுகாக்க எந்த முன்னெச்சரிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் எதிர்கட்சியினர்.

எதிர்கட்சிகள் புகார்
கனமழை, மழையால் தண்ணீர் தேங்கியுள்ள காரணங்களால் சென்னையில் 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. "பருவமழை முன்னெச்சரிக்கை எடுக்கத் தவறிய அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதை மட்டுமே நடவடிக்கையாக கொண்டுள்ளது என்று விமர்சித்திருந்தார் திமுகவின் துரைமுருகன்.

சிறுமிகள் உயிரிழப்பு
கொடுங்கையூரில் தேங்கிய மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்ததில், அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்கும் அரசின் மெத்தனமே காரணம் எனக் கூறி எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், பருவமழை பாதிப்பு தொடர்பாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

முதல்வர் ஆலோசனை
மழை வெள்ளம் பாதித்து 3 நாட்கள் கழித்து தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

ஜெ., ஓபிஎஸ் கையாண்ட விதம்
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 2015 ஆம் ஆண்டு பெருவெள்ளம் வந்தது. 2016 ஆம் ஆண்டு வர்தா புயல் வந்த போது களத்தில் இறங்கி சமாளித்தார் ஓபிஎஸ். இதே போல எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

நோய் பாதிப்பை தடுப்பது எப்படி
கடந்த காலங்களில் பெருவெள்ளம், புயல் தாக்கியபோதும் நோய் தாக்கி அதிக அளவில் மரணங்கள் ஏற்படவில்லை. ஏனெனில் தொற்று நோய் தாக்காமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டு மழைக்கு முன்பாகவே டெங்கு காய்ச்சல், மர்ம காய்ச்சல் காரணமாக உயிர்பலி அதிகமானது. இப்போது மழையும் சேர்ந்து கொண்டதால் மக்களை காக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு அதிகமாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications