'ஜீரோ சி.எம்.' ஓ.பி.எஸ். அறையில் நிதி அமைச்சர் போர்டு, வேறு வெட்கக்கேடு உண்டா: ஸ்டாலின்
சென்னை: முதல்வர் பன்னீர்செல்வத்தின் அறை வாயிலில் இன்னும் நிதி அமைச்சர் பலகை தான் உள்ளது. இதை விட வெட்கக்கேடு ஏதும் உள்ளதா என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்ட திமுக அவைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுந்தரின் மகள் பொற்செல்விக்கும், ராஜராஜன் என்பவருக்கும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் புதன்கிழமை திருமணம் நடைபெற்றது.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அப்போது அவர் கூறுகையில்,
சீர்திருத்த திருமணம்
இந்த சீர்திருத்த திருமணத்தை நடத்தி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது எல்லாம் யாரும் சீர்திருத்த திருமணத்தை ஆச்சரியமாக பார்ப்பது இல்லை. வைதீக திருமணத்தை தான் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். பேரறிஞர் அண்ணா முதல்வராக இருக்கையில் சீர்த்திருத்த திருமணம் செல்லும் என்று சட்டம் கொண்டு வந்தார்.
பன்னீர்செல்வம்
தமிழகத்தில் ஆளும் அதிமுகவினரே நிம்மதியாக இல்லை என்று பொன்குமார் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் என்னிடம் முதல்வர் பன்னீர்செல்வம் பற்றி கருத்து கேட்டார். அதற்கு நான் பன்னீர்செல்வம் நல்லவர், ஆனால் வல்லவரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றேன். அவரோ தற்போது மட்டமான அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்.
தீர்மானம்
கடந்த 3 நாட்களுக்கு முன்பு நானும், துரைமுருகனும் கருணாநிதியை சந்தித்தபோது மாநிலத்தில் பால் விலை உயர்வு, இலங்கையில் 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது பற்றி பேசினோம். இது தொடர்பாக சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பேசினோம். அதற்கு கருணாநிதி இது பற்றி அறிக்கை வெளியிடுமாறு எனக்கு உத்தரவிட்டார். நானும் அறிக்கை வெளியிட்டேன்.
அறிக்கை
நான் அறிக்கை விட்ட மறுநாள் முதல்வர் இல்லை ஜீரோ பன்னீர்செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் எனக்கும், கருணாநிதிக்கும் இடையே பிரச்சனை என்பது போன்றும், கட்சி தலைவர் பதவியை பிடிக்க நான் அறிக்கை விட்டதாகவும் தெரிவித்தார். இதனால் தான் நான் பதிலுக்கு மறுப்பு தெரிவித்து நீண்ட அறிக்கையை வெளியிட்டேன்.
கருணாநிதி
கருணாநிதி தான் திமுகவின் நிரந்தர தலைவர். திமுக ஆட்சிக்கு வந்தாலும் அவர் தான் முதல்வர் என நான் பலமுறை தெரிவித்துள்ளேன். ஆனால் பன்னீர்செல்வம் அரசியல் ஆதாயத்திற்காக என் அறிக்கையை கொச்சைப்படுத்தியதாலேயே நான் விளக்கம் அளிக்க வேண்டியதாகிவிட்டது. முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வத்தின் அறையில் கூட அவரது புகைப்படம் இல்லை. அவரது அறை வாசலில் உள்ள பலகையில் நிதி அமைச்சர் என்று தான் எழுதப்பட்டுள்ளது. இதை விட வெட்கக்கேடு என்ன உள்ளது.
முதல்வர்
தமிழகத்தில் ஜனநாயகம் தழைக்க கருணாநிதி ஆட்சி அமைய நாம் சபதம் ஏற்போம் என்றார் ஸ்டாலின்.