மண்ணின் மைந்தன் மதுசூதனனுக்கு 'பெப்பே'... ஆரம்பத்திலேயே நோ சொன்ன ஈபிஎஸ் சகாக்கள் குஷி!
மண்ணின் மைந்தன் அதிமுகவின் சீனியர் என்றெல்லாம் மதுசூதனன் அடையாளம் காட்டப்பட்டாலும் அவரை நல்ல வேட்பாளராக ஆர்கே நகர் மக்கள் ஏற்கவில்லையோ என்பதை தேர்தலின் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கைகள் உணர்த்துகின்றன.
Recommended Video

சென்னை : மண்ணின் மைந்தன் அதிமுகவின் சீனியர், ஜெயலலிதாவின் அபிமானி என்றெல்லாம் அடையாளம் காணப்பட்ட மதுசூதனனை விட மக்களின் செல்வாக்கு தொகுதியில் ஓட்டு கூட இல்லாத டிடிவி. தினகரனுக்கே என்பது வாக்கு எண்ணிக்கையின் முதல் கட்டம் சொல்கின்றன. இதனால் வேட்பாளராக மதுசூதனனை நிறுத்த வேண்டாம் என்ற தொடக்கத்திலேயே எதிர்ப்பு காட்டிய முதல்வர் பழனிசாமி அணியின் அமைச்சர்கள் குஷியாகியுள்ளனர்.
ஆர்கே நகர் தொகுதியில் முதன்முதலில் 1991ம் ஆண்டு அதிமுகவின் வெற்றியை உறுதி செய்தவர் மதுசூதனன். எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து ஜெயலலிதா அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். ஆனால் அதன் பிறகு சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் தேர்தலில் போட்டியிடுகிறார் மதுசூதனன்.
ஒரு முறை எம்எல்ஏவாக மட்டுமே இருந்த மதுசூதனன் அதன் பின்னர் கட்சியின் அவைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். ஜெயலலிதாவின் அபிமானி என்று அவர் பார்க்கப்பட்டாலும் ஏனோ 1991க்குப் பிறகு ஜெயலலிதா அவருக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பை தரவே இல்லை.

முதலில் ஓபிஎஸ் அணி சார்பில்
இந்நிலையில் அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என்று ஜெயலலிதா மறைவிற்குப் பின் உடைந்த போது ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில் ஓ.பிஎஸ் அணி சார்பில் தேர்தல் களத்தில் இறங்கினார். ஆனால் தேர்தல் நிறுத்தப்பட்டதோடு அப்போதும் அவர் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பாரா என்பது சந்தேகமான நிலையில் தான் இருந்தது.

மீண்டும் வேட்பாளராக அறிவிக்க எதிர்ப்பு
இதனிடையே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணி ஆகஸ்ட் மாதத்தில் இணைந்த பின்னர், டிசம்பரில் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது மீண்டும் மதுசூதனனையே வேட்பாளராக அறிவிக்க ஓ.பிஎஸ் தரப்பு கோரியது. எனினும் முதல்வர் பழனிசாமி தரப்பு அமைச்சர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் விருப்ப மனு அடிப்படையில் வேட்பாளரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

மீண்டும் மதுசூதனன்
முன்னாள் எம்.பி பாலகங்கா, ராஜாராம், கோகுல இந்திரா உள்ளிட்டோர் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் அமைச்சர்களிடம் சமாதான பேச்சு நடத்தி மதுசூதனனையே வேட்பாளராக அறிவித்தனர். ஆனால் மதுசூதனுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளன.

சோர்ந்து போன மதுசூதனன்
காலையிலேயே வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்துவிட்டு போன மதுசூதனன் சோர்ந்த முகத்துடனே காணப்பட்டார். பிரச்சாரம் முதலே பழைய படப் பாடல்களை அவிழ்த்து விட்டு வரும் மதுசூதனன் இன்றும் ஒரு பழைய பாடலைப் பாடிவிட்டு கிளம்பினார். அது என்ன பாட்டு தெரியுமா? போகப் போகத் தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் என்ற பாடல் தான் அது.












Click it and Unblock the Notifications