என்ன ஒரு முட்டாள்தனம்.. கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் இந்த பயிற்சியாளரை!
Recommended Video

கோவை: கோவையில் நடந்த கொடூர சம்பவம் அத்தனை பெற்றோரையும் மனம் பதைக்க வைத்துள்ளது. சந்தோஷமாக அனுப்பி வைத்த மகளை இப்படி ஒரு கோரமான நிலையில் பார்ப்போம் என்று அந்த பெற்றோர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
முழுக்க முழுக்க அந்த பயிற்சியாளரின் முட்டாள்தனத்தால், அஜாக்கிரதையால், அலட்சியத்தால் நடந்துள்ளது இந்த கோவை மரணம். மாணவி லோகேஸ்வரியின் மரணத்திற்கு இந்த பயிற்சியாளர்தான் முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் அந்த மாணவியை அநியாயமாக கொன்றுள்ளார் பயிற்சியாளர். அந்த வீடியோவைப் பார்க்கும்போது அது புலனாகிறது.

மாணவியின் அச்சம்
அந்த மாணவியை மேலிருந்து கீழே குதிக்கக் கூறியுள்ளார் பயிற்சியாளர். ஆனால் அவர் அதற்கு மறுத்து பயந்து போய் ஸ்லாபில் அமர்ந்துள்ளார். குதிக்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் மாணவி இருந்துள்ளார்.

தள்ளி விட்டார்
ஆனால் ஒரு கட்டத்தில் எழுந்து நின்ற மாணவியை பின்னாலிருந்து தள்ளி விட்டுள்ளார் பயிற்சியாளர் ஆறுமுகம். அதை மாணவி எதிர்பார்க்கவில்லை. இதனால் நிலைகுலைந்து பயந்து போன அவர் முன்னோக்கி பாய்வதற்குப் பதில் கீழே இருந்த ஜன்னல் ஸ்லாபில் போய் விழுந்து விட்டார்.

பயந்தவரை தள்ளி விடலாமா
அந்த மாணவிதான் பயப்படுகிறாரே. அவரை ஆசுவாசப்படுத்தி பாதுகாப்பான முறையில்தானே குதிக்க வைத்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு பின்னாலிருந்து தள்ளி விட்டால் எப்படி.. எத்தனை முட்டாள்தனமான செயல் இது?

பாதுகாப்பே இல்லை
பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. ஆனால் கீழே குதிப்பவர்களைத் தாங்கிப் பிடிக்க ஒரு வலையை பிடித்தபடி சிலர் நின்று கொண்டிருந்ததைத் தவிரவேறு எந்தப் பாதுகாப்பும் இருந்ததாக தெரியவில்லை. அந்த மாணவியை தள்ளி விட்டு கொன்றுள்ளனர். இப்படித்தான் இந்த சம்பவத்தை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

நடவடிக்கை தேவை
அந்த பயிற்சியாளரை கொலை வழக்கில் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ளாத கல்லூரி நிர்வாகம் மீதும் கடும் நடவடிக்கை பாய வேண்டும்.












Click it and Unblock the Notifications