கோவையில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு- 2 என்ஜினியர்கள் கைது
கோவை: கோவையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்ற இரண்டு என்ஜினியர்களைப் பொதுமக்கள் துரத்திப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவரது மனைவி சாதனா(29). நேற்று காலை கணவன், மனைவி இருவரும் உறவினர் திருமணத்துக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். கணவர் மற்றும் அவரது தாய் ஒரு பைக்கிலும், சாதனா தனியாக தன்னுடைய 'ஸ்கூட்டி'யிலும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
‘நவஇந்தியா' ஸ்கீம் ரோடு அருகிலுள்ள பி.எஸ்.ஜி. கல்லுாரி அருகே வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், சாதனாவின் கழுத்திலிருந்த நான்கரை பவுன் நகையைப் பறித்துச் சென்றனர்.
சாதனாவின் கூச்சலைக் கேட்டு அப்பகுதியில் சென்றோர் பைக் ஆசாமிகளை துரத்திப் பிடித்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து வழிப்பறியில் ஈடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நகையை பறித்தது சேலத்தை சேர்ந்த வைரமணி(23) மற்றும் நெய்வேலியை சேர்ந்த பாலாஜி(23) எனத் தெரிய வந்தது.
மேலும், அவர்கள் இருவரும் அவிநாசி ரோட்டிலுள்ள தனியார் கல்லுாரியில் மெக்கானிக்கல் மற்றும் இ.சி.இ., டிப்ளமோ இன்ஜி., படித்தவர்கள் என்பதும், கிணத்துக்கடவிலுள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர் என்பதும் கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு கோவைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications