போராட்டக்காரர்கள் மீது தடியடி.. போலீசாரை கண்டித்து கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கல்லூரிகளுக்கு வந்த மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளுர்: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் குதித்ததையடுத்து தமிழக அரசு பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்த நிலையில், இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று கல்லூரிக்கு வந்த பொன்னேரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து இந்த உள்ளிருப்பு போராட்டத்தை மாணவர்கள் நடத்தி வருகின்றனர்.

இதே போன்று சென்னையில் மெரினா கடற்கரைப் பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டிருந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.
இந்தப் பகுதியில் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும், போராட்டக்காரர்கள் மீது போலீசார் கல்வீச்சும் நடத்தினார்கள். இதனையடுத்து, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உள்ளிட்டப் பகுதிகள் போர்க்களம் போல் காட்சி அளிக்கின்றன.
எனவே, இந்தப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டிருந்தாலும் மாணவர்கள் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு கலவர பூமி போல காட்சி அளிப்பதால் இப்பகுதியில் வசிப்பவர்கள் பள்ளிகளுக்கு தங்களது குழந்தைகளை அனுப்பாமல் வீட்டிற்குள் வைத்துள்ளனர்.
மெரினா கடற்கரை பகுதியில் ராணி மேரி கல்லூரி, மாநிலக் கல்லூரி, லேடி விலிங்டன் மேல் நிலைபள்ளி, மார்டன் பள்ளி உள்ளிட்ட மிக முக்கியமான கல்விக் கூடங்கள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications