Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மருத்துவமனை நில அபகரிப்பு..அதிராம்பட்டினம் திமுக நகர செயலாளர் மீது புகார்! நிருபருக்கு கொலை மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: அதிராம்பட்டினத்தில் பொது நல அமைப்பின் மருத்துவமனை கட்டும் பணியை நீதிமன்ற உத்தரவை மீறி திமுக நகர செயலாளர் தலைமையில் தடுத்த அக்கட்சியினர், அங்கிருந்த பத்திரிகையாளரை தாக்க முயன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் மக்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்வதற்காக அதிரை ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேசன் என்ற அமைப்பு பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் மெயின் ரோட்டில் மருத்துவமனை கட்ட இடம் வாங்கப்பட்டது.

 Complaint against Adirampattinam DMK municipality vice chairman on Land encroachment

இந்த நிலத்தை அபகரிக்கும் வகையில் அதற்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் 40 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி நிலத்தை மீட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த நிலத்தில் மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் கட்டும் பணியில் நடைபெற்றது.

அப்போது நீதிமன்ற உத்தரவை மீறி திமுகவை சேர்ந்த நகராட்சி துணைத் தலைவர் இராம.குணசேகரன், நகராட்சித் தலைவரின் கணவர் MMS அப்துல் கரீம், திமுக வார்டு கவுன்சிலர் மற்றும் நிர்வாகிகள் அங்கு சென்று கட்டுமானப் பணியை தடுத்தாக தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையரிடம் சங்கத்தின் பொருளாளர் அஹமது இப்ராஹிம் புகாரளித்து உள்ளார்.

நகராட்சி ஆணையரிடம் புகார்: இது குறித்து அவர் எழுதி இருக்கும் புகார் மனுவில், "அதிராம்பட்டினம் ரூரல் டெவெலப்மெண்ட் அசோசியேசன் (ARDA) சார்பாக அதிராம்பட்டினம் மக்களின் நலனுக்காக மருத்துவமனை கட்ட வேண்டி அதிராம்பட்டினம் கிராம புல எண்.262/41ல் ஏ1.34 செண்ட் நிலம் அரசாணை எண்.325/1983 (வருவாய்த்துறை) படி கிரயம் வாங்கப்பட்டது. அங்கு மருத்துவமனை அமைவதை தடுக்கும் நோக்குடன் அதிராம்பட்டினத்தை சேர்ந்த வீரகனேசன் என்பவர் உரிமையியல் வழக்கு ஒன்றை தொடுத்தார்.

அவ்வழக்கினை பட்டுக்கோட்டை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் மேற்படி வீரகனேசன் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிப் பேராணை மனு ஒன்றை தாக்கல் செய்தார். அம்மனுவை தள்ளுபடி செய்த மாண்பமை உயர்நீதிமன்றம் மனுதாரரை வெகுவாக கண்டனம் செய்திருந்தது. அதன் பின் மேற்படி வீரகனேசன் தாக்கல் செய்த நீதிப்பேராணை மேல்முறையீட்டு மனுவையும் மாண்பமை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திமுக நகர செயலாளர்: இதன் பிறகு எங்கள் சங்கத்தின் சார்பில் அவ்விடத்தில் மருத்துவமனை கட்டுவதற்காக அதிராம்பட்டினம் பேரூராட்சியில் விண்ணப்பம் செய்து, அனுமதி கிடைக்கப் பெற்று பணிகளை துவங்கும் சமயங்களில் எல்லாம் அப்போதைய அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர், திரு.இராம.குணசேகரன் மற்றும் திரு.முத்துக்கருப்பன் ஆகியோர் தொடர்ந்து இடையூறு செய்து வந்தபடியால், எங்கள் சங்கத்தின் சார்பில் நிரந்தர உறுத்துக் கட்டளை பிறப்பிக்க கோரி அசல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 Complaint against Adirampattinam DMK municipality vice chairman on Land encroachment

நீதிமன்ற தீர்ப்பு: வழக்கினை விசாரித்த மாண்புமிகு பட்டுக்கோட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மேற்படி "சொத்தில் வாதி சங்கத்திற்கு உள்ள வசத்திலும் அனுபவத்திலும் எதிர்வாதிகளோ அல்லது அவர்களுடைய நபர்களோ தலையிடக்கூடாது" என்று நிரந்தர உறுத்துக் கட்டளை வழங்கி தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து வழக்கின் எதிர்வாதிகள் பட்டுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த உரிமையியல் மேல்முறையீட்டு மனுவும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் மேற்படி நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டு பட்டுக்கோட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மற்றும் தீர்ப்பினை உறுதி செய்தன.

மேற்படி நபர்களின் இடையூறுகள் மற்றும் நீண்ட சட்டப் போராட்டம் காரணமாக மேற்படி நிலத்தில் எங்களால் மருத்துவமனை கட்டும் பணியினை துவங்குவதில் தவிர்க்க முடியாத காலத்தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் மேற்படி சொத்து வெளி நபர்களால் ஆக்கிரமிக்கப்படாமல் இருக்கும் பொருட்டு கருங்கல் நட்டு, கம்பி வேலி அமைத்து இருந்தோம்.

சுற்றுச்சுவர் பணி: இடையில் சிலர் எதிர்வாதிகளின் தூண்டுதல் பேரில் கம்பி வேலிகளை அகற்றவே, கடந்த 2018 ஆம் ஆண்டு அரசு சர்வேக்கு விண்ணப்பித்து எங்கள் சங்கத்திற்கு சொந்தமான மேற்படி நிலத்தினை அளந்து அத்துக்கட்டி கருங்கல் வேலி அமைத்து பாதுகாத்து வந்தோம். மேற்படி சொத்தில் மருத்துவமனைக் கட்டும் பணிகளை விரைந்து துவங்குவதற்காக கடந்த 16.05.2023 அன்று முதல் சுற்றுச்சுவர் கட்டும் வேலை ஆரம்பித்து நடந்து வந்தது.

இந்நிலையில் 22.05.2023 காலை சுமார் 10.40 மணியளவில் அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையர் கூறியதன் பேரில் அதிராம்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் திரு.இராம.குணசேகரன் தலைமையில் வந்த நகர்மன்ற தலைவரின் கணவர் திரு.MMS அப்துல் கரீம் மற்றும் அடையாளம் தெரிந்த நபர்கள் எங்கள் சங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டும் வேலையில் ஈடுப்பட்டு வந்த ஒப்பந்ததாரர் மற்றும் தொழிலாளர்களை மிரட்டி துரத்தியுள்ளனர்.

திமுகவினர் மிரட்டல்: அங்கிருந்தவர்கள் நீதிமன்ற உத்தரவுகளை காட்டிய போது, "நாங்கள் சொல்றதுதான் சட்டம். கோர்ட்டுலா எங்கள ஒன்னும் செய்ய முடியாது. வேலைய நிறுத்து.. இல்லனா நடக்குறதே வேற" பேசியுள்ளனர். என ஒவ்வொருமுறை நாங்கள் பணிகளை துவங்கும் போதும் மேற்படி நபர்களால் இடையூறு ஏற்பட்டு வருகிறது.

ஆகவே சமூகம் ஐயா அவர்கள் இது விஷயத்தில் தலையிட்டு நீதிமன்ற உத்தரவினை மதிக்காமல், எங்கள் சங்கத்திற்கு சொந்தமான பட்டா நிலத்தில் நடைப்பெற்றுவரும் பணிகளை சட்டவிரோதமாக தடுத்து நிறுத்த முயற்சித்துவரும் அதிராம்பட்டினம் நகர்மன்ற தலைவரின் கணவர் திரு. எம்.எம்.எஸ்.அப்துல் கரீம், நகர்மன்ற துணைத்தலைவர் திரு.இராம.குணசேகரன் மற்றும் நகராட்சி ஆணையர் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு பணிகளை தொடர உரிய பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கிடையே இந்த கட்டுமானப் பணியை பார்வையிட்டுக்கொண்டு இருந்த முஹம்மது சாலிஹ் என்ற பத்திரிகையாளரை நோக்கி சென்ற திமுக கவுன்சிலர் கிருத்திகா என்பவரின் கணவர் ராஜா, அவரை தகாத வார்த்தைகளால் ஒருமையில் திட்டி மிரட்டல் விடுக்கும் வீடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பத்திரிகையாளர் புகார்: இது தொடர்பாக காவல்நிலையத்தில் பத்திரிகையாளர் சாலிஹ் புகாரளித்துள்ளார். அதில், "நான் ஆன்லைன் ஊடகத்தின் நிருபராக இருக்கிறேன். இந்நிலையில் எனது அண்ணள் அபூபக்கர் கட்டிட காண்ட்ராக்டர் வேலைகள் செய்து வருகிறார். அதில் நான் மேற்பார்வையாளராக இருந்து பணி செய்து வருகிறேன். ஷிஃபா மருத்துவமனைக்கு சொந்தமான இடத்திற்கு மருத்துவமனை விரிவாக்க பணி செய்து வருகிறோம்.

இந்நிலையில் கடந்த 22.05.2023 ஆம் தேதி சுமார் காலை 11 மணியளவில் அதிராம்பட்டினம் சேர்மன் வாடியை சேர்ந்த ராஜா என்பவர் தலைமையில் இராம.குணசேகரன், MMS.அப்துல் கரீம், முகைதீன், அபுதாகிர், இன்பநாதன் மேலும் 20 க்கும் மேற்பட்ட குண்டர்களுடன் நான் வேலை செய்துக் கொண்டிருந்த இடத்திற்கு வந்து என்னை பார்த்து ராஜா என்பவர் ஏண்டா என்னய பத்தி மீடியாவில் எழுத நீ யாருடா என பொதுவெளியில் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசி என்னை அடிக்க வந்தார்.

அப்போது நான் உங்களை பற்றி எழுதவில்லை என்று கூறினேன். அதற்கு நாங்கள் ஆளும் கட்சிடா, நாங்கள் அப்படிதாண்டா இருப்போம். எங்கள பத்தி இனி எதுலையாவது எழுதினால் உன்னை அடித்தே கொலை செய்து விடுவேன் என அன்று அவரும் அவருடன் வந்தவர்களும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயம் காட்டி அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசி உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி சென்றனர். எனவே மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து எனது உயிருக்கு உரிய பாதுகாப்பை வழங்கிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

பத்திரிகையாளர் அமைப்பு: இந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு தெரிவித்து உள்ளதாவது, "அதிராம்பட்டினத்தில் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர் முஹம்மது சாலிஹை தகாத வார்த்தையில் திட்டி, தாக்க முயன்ற நகராட்சி திமுக கவுன்சிலர் கிருத்திகாவின் கணவர் ராஜாவை வன்மையாக கண்டிக்கிறோம். காவல்துறையில் அளித்துள்ள புகார் மீது காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று வலியுறுத்தி உள்ளது.

அதிமுக நிர்வாகி: இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அதிமுகவின் நிர்மல் குமார், "அதிராம்பட்டினம் மக்களின் நலனுக்காக மருத்துவமனை கட்ட ARDA சிறுபான்மை சமூக அமைப்பின் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும் திமுக நகர்மன்ற தலைவரின் கணவர் M.M.S.அப்துல் கரீம், நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன். நீதிமன்றம் உத்தரவிட்டும் அடங்காத திமுகவினர். Survey No.262/41 நீங்க திருந்துவதற்கு வாய்ப்பே இல்லையா" என்று குறிப்பிட்டு உள்ளார்.

உள்கட்சிப்பூசல்: இதற்கிடையே, திமுக நிர்வாகிகளின் இந்த செயல் நகர திமுகவிலேயே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அக்கட்சியின் நீண்ட நாள் உறுப்பினரான அன்சாரி என்பவர் திமுக நகர்மன்ற தலைவர் இராம.குணசேகரன், நகராட்சி தலைவரின் கணவர் எம்.எம்.எஸ். அப்துல் கரீம், கவுன்சிலரின் கணவர் ராஜா உள்ளிட்டோர் மீது மாவட்ட செயலாளருக்கே புகார் மனு எழுதினார்.

அதிராம்பட்டினத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ. அண்ணாதுரை வருவதாக இருந்து கடைசி நேரத்தில் அவர் வராத காரணத்தால், நகர திமுக அவைத் தலைவரிடம் அன்சாரி தலைமையிலான 50க்கும் அதிகமான திமுகவினர் புகார் மனுவை அளித்துவிட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் நகர திமுக நிர்வாகிகளுக்கு இடையிலேயே பூசல் பூதாகரமாக வெடித்து உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+