ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: புறக்கணிப்பு கோஷ்டியில் காங்கிரஸ்?
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை காங்கிரஸ் கட்சியும் புறக்கணிக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடை பெறுகிறது. இந்த தேர்தலில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக ஜெயலலிதா போட்டியிடுகிறார்.
தி.மு.க. போட்டியிடவில்லை என்று அறிவித்தது. அதை தொடர்ந்து பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா. ஆகிய கட்சிகளும் போட்டியிடப் போவது இல்லை என்று அறிவித்து விட்டன.
பின்வாங்கிய பா.ஜ.க.
பாரதிய ஜனதா கட்சியும் கூட இத்தேர்தலில் போட்டியிடுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. தே.மு.தி.க. போட்டியிட்டால் பா.ஜ.க. ஆதரவு அளிக்கும் என்று அந்த கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறி இருக்கிறார்.
மவுனம் காக்கும் தே.மு.தி.க.
அதேநேரத்தில் தே.மு.தி.க.விடம் இருந்தும் இதுவரை அதற்கான அறிவிப்புகள் எதுவும் வர வில்லை. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவர் அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டார். இது தவிர சுதந்திர போராட்ட தியாகி சசிபெருமாள் உள்பட வேறு சிலரும் இந்த இடைத்தேர்தலில் களம் இறங்குகிறார்கள்.
வரிந்து கட்டும் இடதுகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளரை நிறுத்தப் போவதாக கூறி இருக்கிறது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு அளிக்கிறது.
காங்கிரஸ் நிலை என்ன?
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது காங்கிரஸ் கட்சியும் போட்டியிடாது என கூறப்படுகிறது.
செயற்குழுவில் எதிர்ப்பு
சென்னையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஒருசிலர் ஆர்.கே. நகரில் போட்டியிடலாம் என்று கருத்து தெரிவித்தனர். ஆனால் பெரும்பாலான நிர்வாகிகள் இப்போது இடைத்தேர்தலை சந்தித்தால் கட்சியின் வளர்ச்சி பணி ஒரு மாதம் தடைபடும். எனவே போட்டி வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதனால் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகிஸ்வாஸ்னிக்கிடமும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. எனவே ஆர்.கே.நகரில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று அக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.