பொதுசிவில் சட்டம் தேவையில்லை என்பதே காங். நிலை- குஷ்புவுக்கு திருநாவுக்கரசர் பதிலடி
பொதுசிவில் சட்டம் தேவையில்லை என்பதே காங்கிரஸ் நிலை; பொதுசிவில் சட்டத்தை செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு ஆதரிப்பது அவரது சொந்த கருத்து என தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை: பொதுசிவில் சட்டம் தேவையில்லை என்பதே கட்சியின் நிலை; பொதுசிவில் சட்டத்தை ஆதரித்து தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து என தமிழக காங். கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் பதிலளித்துள்ளார்.
பொதுசிவில் சட்டத்தை தாம் ஆதரிப்பதாக புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னிபரீட்சை நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பாக சென்னையில் இன்று திருநாவுக்கரசரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்:
பொதுசிவில் சட்டம் தேவையில்லை என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. பாஜகவின் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூட பொதுசிவில் சட்டம் கொண்டுவர முயற்சிக்கவில்லை.
தற்போது ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அமைப்புகள் தூண்டுதலால் பொதுசிவில் சட்டம் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதை காங்கிரஸ் கட்சி அடியோடு எதிர்க்கும்.
பொதுசிவில் சட்டத்தை ஆதரிப்பதாக நடிகை குஷ்பு கூறியிருப்பது அவரது சொந்த கருத்தாகும்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.