வீறு கொண்டெழுந்த விஜயதாரணி.. இமெயிலில் பாய்ந்த புகார்... வீழ்வாரா ஈவிகேஎஸ் இளங்கோவன்?
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தம்மை 3வது முறையாக 'திட்டிவிட்டதாக' காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு அக்கட்சி எம்.எல்.ஏ. விஜயதாரணி இ மெயில் அனுப்பியுள்ளார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக தங்கபாலு, சிதம்பரம் உட்பட அத்தனை கோஷ்டி தலைவர்களும் டெல்லி சென்று சோனியா, ராகுல் காந்தியிடம் நேரில் புகார் தெரிவித்திருந்தனர். இதனால் தங்கபாலுவுடன் வெளிப்படையாகவே இளங்கோவன் மோதினார்.
தங்கபாலுவின் சொத்து விவரங்கள் தொடர்பாக இளங்கோவன் பகிரங்கமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதன் பின்னர் தமக்கு எதிரான வசந்தகுமார் வசம் இருந்த வர்த்தக காங்கிரஸ் தலைவர் பதவியை பறித்தார் இளங்கோவன்.

விஜயதாரணியின் கலகக் குரல்
இந்நிலையில் புதிய பஞ்சாயத்தாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, இளங்கோவனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். தம்மை மிக மோசமாக இளங்கோவன் விமர்சித்ததாக கூறி விஜயதாரணி தரப்பு போலீசுக்கு போனது. அதேபோல் விஜயதாரணி ஜாதியின் பெயரால் தங்களை மிக மோசமாக திட்டியதாக இளங்கோவன் ஆதரவாளர்களும் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

போஸ்டர் கிழிப்பு
இதனிடையே நடந்த சம்பவங்கள் தொடர்பாக ராகுல் காந்திக்கு இ மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார் விஜயதாரணி. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திரா காந்தி பிறந்த நாளையொட்டி கடந்த 19-ந்தேதி பெண்களுக்கு அதிகாரமளித்தல் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக இந்திரா காந்தி படத்துடன் வைக்கப்பட்ட பேனரை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவாளர்கள் கிழித்து எறிந்தனர். அந்த பேனர் ஆண்கள் கழிவறையில் கிடந்தது.

தரக்குறைவான பேச்சு
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க இளங்கோவனிடம் வலியுறுத்தினேன். ஆனால் நடவடிக்கை எடுக்க மறுத்த அவர் என்னை தரக்குறைவாக விமர்சித்து காங்கிரஸை விட்டு வெளியே போகுமாறு கூறினார்.

3வது முறை...
இப்படி இளங்கோவன் என்னை விமர்சிப்பதும் திட்டுவதும் இது 3-வது முறையாகும். என்னை மட்டுமல்ல கட்சியில் இருக்கும் பெண்கள் பலரையும் இதேபோல் திட்டியிருக்கிறார்.

பெண்களுக்கு தொல்லை...
பெண்களுக்கு தொல்லை கொடுப்பது இளங்கோவனுக்கு வாடிக்கையாகிவிட்டது. மகிளா காங்கிரஸ் தலைவியாக நான் பொறுப்பேற்ற பின்னர் பெண்களின் பலத்தை அதிகரிக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தேன்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு என்னை கட்சியில் இருந்து வெளியே செல்லுமாறு சொல்ல அதிகாரம் இல்லை. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக இங்கே அசாதாரண சூழல் நிலவுகிறது. சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் உரிய முடிவை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விஜயதாரணி அந்த மெயிலில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications