தமிழக வாழ்வாதாரங்களுக்கு காங்கிரஸ் வஞ்சம் செய்கிறது: மறுமலர்ச்சிப் பயணத்தில் வைகோ பேச்சு
தூத்துக்குடி: காங்கிரஸ் தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமிழக வாழ்வாதரங்களுக்கு வஞ்சகம் செய்கிறது. இந்த அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும்.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத்தை நேற்று தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் மாலை 4 மணிக்கு தொடங்கினார். இரவு 8 மணிக்கு நாசரேத்தில் நிறைவு செய்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் போராடி வருகிறோம். "செய் அல்லது செய்து மடி" என்று அண்ணல் மகாத்மா காந்தி அறிவித்தார். அப்படிப்பட்ட வைர வரிகளுக்குச் சொந்தர்காரர்கள் நாங்கள். முல்லைப் பெரியாறு ஆகட்டும்; கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகட்டும்; காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையாகட்டும்; பாலாற்றுப் பிரச்சினையாகட்டும்; மணல் கொள்ளையாகட்டும் அத்தனைக்கும் போராடியவர்கள் நாங்கள்.
குழந்தைகளின் எதிர்காலத்திற்காக போராடுபவன். அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அக்கறைகொண்டவன். தாய்மார்கள், குழந்தைகளின் நலனைக் காக்க மதுவிலக்கு பிரச்சார நடைப்பயணம் மேற்கொண்டவன்.
நேற்றைய தினம் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. அந்த விவசாயிகள் மாநாட்டில் பேசுகிறதுபோது, தரமிரபரணி நதி மிகவும் பழமையானது என்று சொன்னேன். தாமிரபரணிக்கு ஈடான நதி இந்தியாவில் இல்லை.
காமராஜர் நெய்யாறு இடதுகரை சாணலை அமைத்தார். ஆனால் கேரளம், குமரி மாவட்ட மக்களுக்குக் கொடுக்க வேண்டிய தண்ணீரைக் கொடுப்பதில்லை. கேரளாவினால் முல்லைப் பெரியாறு, ஆந்திராவினால் பாலாறு, கர்நாடகத்தால் காவிரி என மூன்று பக்கத்திலும் தமிழ்நாட்டுக்கு ஆபத்து வருகிறது.
தாமிரபரணி நதி பொதிகையில் தோன்றி காயலில் கலக்கின்ற நதி இது. தமிழ்நாட்டிலே தோன்றி தமிழ்நாட்டிலேயே கடலில் கலக்கிறது. இது தமிழ்நாட்டு நதி இது. இந்த நதியில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
காங்கிரஸ் தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமிழக வாழ்வாதரங்களுக்கு வஞ்சகம் செய்கிறது. இந்த அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும்.
ஆட்சியாளர்களின் கண்டுகொள்ளாத செயலால் ஆற்றுமணலை சுரண்டப்படுகிறது. கோடான கோடி மக்களின் எதிர்காலம் பாலைவனம் ஆகிற அளவுக்கு ஆற்று மணல் சுரண்டப்படுகிறது. தாது மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. இதை கடந்த தி.மு.க. ஆட்சியும், தற்போது ஆளுகிற அ.தி.மு.க. அரசும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது.
மதிமுகவிற்கு வாய்ப்பு
ஆகையினால், நேர்மையான ஊழற்ற அரசியலை உருவாக்க மக்களுக்கு தொண்டாற்றுகிற எங்களை அரசியலில் நீங்கள் எங்களை ஊக்குவிக்க வேண்டும். உங்களுக்குகாகப் பாடுபடுவதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பை நீங்கள் உருவாக்கித்தர வேண்டும்.
ஈழத்தமிழர்கள் படுகொலை செய்த ராஜபக்சே அரசை கேள்வி கேட்பார் இல்லாமல் போய்விட்டது. இதற்கு முழுக்கக் காரணம் காங்கிரஸ் அரசுதான். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் இதற்கு காரணம். கொழும்பில் காமன்வெல்த் மநாhடு நடப்பதற்கும் இந்தியாவில் காங்கிரஸ் தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிதான் காரணம்.இப்பொழுது நாட்டுக்காக பாடுபடுகிற ஒரே இயக்கம் மறுமலர்ச்சி தி.மு.க. தான்.
மதுவிலக்குப் பிரச்சாரம்
மதுவின் கொடுமைகளை மக்களுக்கு எடுத்துக்கூற உவரியில் முதல் மதுரை வரை முதல் கட்டமாக என் தொண்டர்களுடன் பிரச்சாரம் பயணம் செய்தேன்.
அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 6 நாட்கள் நடந்தோம். அந்த நடைப்பயணத்தில் எந்த இடத்திலும் அரசியல் பேசவில்லை. மதுக் கொடுமை வருங்காலத்தை அழித்துவிடும் என்று சொன்னேன்.
நாதியற்றவர்களுக்கு குரல்கொடுக்கிறோம். ஏழை எளியோருக்காகக் குரல் கொடுக்கிறோம். தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காப்பதற்காகக் குரல் கொடுக்கிறோம்.
மக்கள் பணி
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. ஆனால் நாங்கள் மக்களுக்காக பணிகள் செய்வதை நிறுத்தவில்லை. மீனவர்கள் பிரச்சினை, முல்லைப் பெரியாறு உரிமைப் பிரச்சினை, ஈழத் தமிழரக்கான பிரச்சினை, ராஜபக்சே எதிராக நான்கு மாநிலங்களைக் கடந்து சாஞ்சி வரை சென்று கருப்புக்கொடி போராட்டம், டெல்லியில் பிரதமர் வீடு முற்றுகை, திருப்பதியில் முற்றுகை என எங்கள் போராட்டம் வீறுகொண்டதைத் தவிர சோர்ந்துவிடவில்லை.
கடந்த இரண்டு ஆண்டு காலமும் நாட்டு மக்களின் நலனுக்காக நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திக்கொண்டு வந்திருக்கிறோம்.
மத்திய அரசு ஆட்டம் கண்டுகொண்டு இருக்கிறது. நாடாளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வர இருக்கிறது. தேர்தல் காலத்தில் உங்களை சந்திக்க நேரம் இருக்கிறதோ இல்லையோ. அதனால்தான் இப்பொழுதே உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன்.
எங்களிடம் காசு இல்லை. வெளிப்படையாக நிதி கேட்டோம். அதை பலபேர் பாராட்டி இருக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து மக்களுக்காகப் பாடுபட்டு வருகிறோம்.
லோக்சபா தேர்தல் பிரச்சாரம்
மறுமலர்ச்சி தி.மு.க. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும். முதன் முதலாக செய்துங்கநல்லூரில் உங்களைச் சந்திக்கிறேன். நடுநிலையாளர்களே, இளைஞர்களே, மாணவர்களே, தாய்மார்களே யோசிங்கள் சாதி மத பேதமற்ற மறுமலர்ச்சி தி.மு.க.வுக்கு வாய்ப்புத் தாருங்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, சிறுபான்மை இன மக்களுக்காக பாடுபட வாய்ப்பு தாருங்கள். தமிழக மக்களின் உரிமைக்குரல் ஒலிக்கவேண்டும் என்பதற்காக எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள்.
பணத்துக்கு ஓட்டு போடாதீர்கள்
பொதுமக்களை நாடி வந்திருக்கிறேம். பணம் மலையாக குவிக்கப்பட்டிருக்கிறது. அது உழைத்து சேர்க்கப்பட்ட பணம் இல்லை. கொள்ளையடிக்கப்பட்ட பணம்.
வீட்டுக்கு வீடு அயிரம் இரண்டாயிரம் பணம் கொடுத்தவுடன் முடிந்துவிடும். பிறகு மக்களை அவர்கள் மறந்துவிடுவார்கள். ஐந்தாண்டு காலம் நீங்கள் ஏமாறத்தான் வேண்டும். அப்படிப்பட்ட நிலை மாற எங்களுக்கு வாய்ப்புத் தாருங்கள்.
இளைஞர்களிடம் புதியதோர் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. மாற்றம் என்பதே சாத்தியம் இல்லை என்ற கருத்துக்கு முடிவின் பெயர்தான் மாற்றம்.
வாழ்வாதாரப் பிரச்சினை
நாங்கள் வெற்றி பெற்றால், மணல் கொள்ளை, நதி நீர் பிரச்சினை, வாழ்வாதாரப் பிரச்சினை போன்ற சூழலிலிருந்து தமிழகம் விடுபடும். அந்தத் தகுதியோடு ம.தி.மு.க. மக்களை சந்திக்கிறது. தாய்மார்கள் கண்ணீரை துடைப்பதற்காக பாடுகிறோம் என்றார் வைகோ.