ஸ்ரீராஜா சொக்கரை மாற்றுங்கள்: போர்க்கொடி தூக்கும் சிவகாசி காங்கிரஸார் !
விருதுநகர்: சிவகாசி சட்டசபை தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரீராஜா சொக்கரை மாற்றக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போர்கொடி தூக்கியுள்ளனர்.
சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 22ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே திமுக கூட்டணியில் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி தொகுதி ஒன்று மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இக்கட்சியின் வேட்பாளராக சிவகாசி முன்னாள் எம்.எல்.ஏ.சொக்கர் மகன் ஸ்ரீராஜாவை அக்கட்சி தலைமை அறிவித்தது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். மேலும் அவருக்கு பதிலாக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.கணேசனை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்.
சிவகாசியைச் சேர்ந்த கணேசன் கட்சியின் விருதுநகர் மாவட்டத் தலைவராக 14 ஆண்டுகள் பணியாற்றியவர். இந்த தொகுதிக்கு 13 பேர் விருப்ப மனு அளித்தனர். அவர்களில் ஒருவருக்கு கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய அநியாயம் இழைத்து விட்டீர்கள் என காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் காங்கிரஸ் கட்சி தலைமை தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் ஸ்ரீ ராஜாவை மாற்றி கணேசனை வேட்பாளராக அறிவிக்க வேண்டும். இல்லையேனில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் கட்சியினரும் கட்சியை விட்டு வெளியேறிவிடுவோம். இந்த மாவட்டத்தில் உள்ள 7 தொகுதியிலும் தேர்தல் பணி செய்ய மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.