இளங்கோவன் தலைமையில் தேர்தல் பணிகளை பார்வையிட 27 பேர் கொண்ட காங். குழு அமைப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பணிகளை பார்வையிட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் 27 பேர் கொண்ட குழுவை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார்.
வருகிற சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகள் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியிலும், திமுகவிலும் சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக அரவக்குறிச்சி தொகுதியைப் பெற்றுத் தரவேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி போர்க்கொடி தூக்கியுள்ளார். அதேபோல் செய்யாறு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதற்கு திமுகவிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து செய்யாறு தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படுவதற்கு அக்கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக தேர்தல் பணிகளை பார்வையிட காங்கிரசில் 27 பேர் கொண்ட குழுவை அக்கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையிலான இந்தக் குழுவில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, தங்கபாலு மற்றும் வசந்தகுமார் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications