வேட்டிக்கு அனுமதி மறுப்பு- சிறை நிரப்பும் போராட்டம்- அமெரிக்கை நாராயணன் அறிவிப்பு!
நெல்லை: சென்னை கிரிக்கெட் கிளப்பில் வேட்டி கட்டி வருவோருக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரான அமெரிக்கை நாராயணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து தென்காசி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், கிராமப்புறங்களில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் 12 ஆயிரத்து 522 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் பாதி ஊராட்சிகளில் 2016ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தலைவர்களாக இருக்கும் வகையில் எங்களது செயல்பாடுகள் இருக்கும்.
ஏற்கனவே இரணடு மாவட்டங்களில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சந்திப்பை நடத்தி இருக்கிறோம். இது மூன்றாவது மாவட்டம் ஆகும்.
வேட்டி, சட்டை அணிந்தவர்களை கிரிக்கெட் கிளப்பில் அனுமதிக்காததை கண்டித்து காங்கிரஸ் சார்பில் சிறை நிரப்பும் போராடடத்தை நடத்துவோம். அரசு உதவி பெறும் கிளப்புகளில் இதுபோல் வேட்டி கட்டியவர்களுக்கு அனுமதி மறுத்தால் அந்த கிளப்பின் அங்கிகாரத்தை அரசு ரத்து செய்யவேண்டும் என்றார் அவர்.
பேட்டியின்போது தலைவர் அய்யாத்துரை, செல்வராஜ், சக்திநாதன், தங்கராஜ், குருசாமி, சண்முகையா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications