சீனியர்கள் இருக்க ஜுனியருக்கு பதவி… சர்ச்சைக்குள்ளான ராணுவத் தளபதி நியமனம்!
மூத்த அதிகாரிகள் இருவர் இருக்க ஜுனியருக்கு தரைப்படைத் தளபதியாக தேர்வாகியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சென்னை: தரைப்படைத் தளபதியாக தேர்வாகியுள்ள பிபின் ராவத்தின் பதவி உயர்வு குறித்து சர்ச்சை கிளம்பியுள்ளது. மூத்த அதிகாரிகள் இருவர் இருக்க இவர் தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
தற்போது ராணுவத் தளபதியாக உள்ள தல்பீர் சிங் சுஹாக் வரும் 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அவருடைய இடத்திற்கு லெப்டினன்ட் ஜெனரல் பிபின் ராவத்தை மத்திய அரசு நியமித்துள்ளது. தல்பீர் சிங்கிற்கு அடுத்த நிலையில் இரண்டு மூத்த அதிகாரிகள் உள்ள நிலையில், ஜுனியரான பிபின் ராபத்திற்கு தளபதி பொறுப்பு வழங்கி நியமனம் செய்யப்பட்டுள்ளது குறித்து சர்ச்சை கிளம்பியது.
இந்நிலையில் தரைப்படைத் தளபதியாக தேர்வாகியுள்ள பிபின் ராவத் மிகுந்த திறமைசாலி என்று ராணுவத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் முனையில் அவர் சிறப்பாக செயல்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இரண்டு மூத்த அதிகாரிகள் இருக்க, பிபின் ராவத்திற்கு பதவி வழங்கியது ஏன் என்று காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி, நாங்கள் பிபின் ராவத்தின் பணிகளுக்கு மரியாதை அளிக்கிறோம். தனிப்பட்ட வகையில் யார் மீதும் விரோதம் இல்லை. ஆனால் மூத்த அதிகாரிகள் இருக்கும் போது பிபின் ராவத்தை தளபதியாக நியமித்திருப்பது ஏன் என்ற கேள்வி சட்டபூர்மானது என்று கூறியுள்ளார்.