விடுதலைப் புலிகள் தொடர்பான காங். நிலைப்பாடு மாற வேண்டும்: கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேச்சு
சரித்திரத்தை பேசுவதைவிட எதிர்காலத்துக்கு நம்பிக்கை தரும் அரசியல்தான் முக்கியம் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை: விடுதலைப் புலிகள் தொடர்பான காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மாற வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் பதிவியேற்ற பின்னர் கட்சியை வலுப்படுத்தும் விதமாக மண்டல ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை மண்டல காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் அக் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்திபவனில் இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியதாவது: சமுதாயத்திற்கு ஏற்ப காங்கிரஸ் கட்சியினர் மாற வேண்டும் எனவும், பழைய வரலாறுகளை காங்கிரஸ் கட்சியினர் பேச வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், சரித்திரத்தை பேசுவதைவிட எதிர்காலத்துக்கு நம்பிக்கை தரும் அரசியல்தான் முக்கியம். சரித்திரத்தை மறந்துவிடுங்கள் என்றோ எந்த ஒரு தலைவருக்கும் எதிராகவோ நான் பேசவில்லை. ராஜீவ் கொலையை வைத்து காங்கிரஸ் கட்சியினரை அணுகி வருகிறோம். ஆனால் இன்றைய இளைய தலைமுறையினறோ 2009-ம் ஆண்டு சம்பவத்தையே பார்க்கிறது.
விடுதலைப் புலிகள் தொடர்பான காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மாறவேண்டும் என்றார். கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் கார்த்தி சிதம்பரம் இவ்வாறு கூறியிருப்பது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.