ஐடி அதிகாரிகளை மிரட்டிய அமைச்சர்கள்.. விசாரணைக்கு உத்தரவு.. சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடி!
வருமானவரித்துறை அதிகாரிகளை மிரட்டிய அமைச்சர்களை விசாரித்து வழக்குப் பதிவு செய்ய சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் கரண்சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்த போது, அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், கடம்பூர் ராஜூ மற்றும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் மீது நடவடிக்கை எடுக்க ஆணையர் கரண்சின்ஹா உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்களை விசாரித்த பின்னர் வழக்குப் பதிவு செய்யவும் கரண்சின்ஹா ஆணைபிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அ.தி.மு.க அம்மா அணி சார்பில் வேட்பாளராக களமிறங்கினார் டிடிவி தினகரன். தேர்தலில் வெற்றி பெற்று தீர வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சர்கள், எம்பிக்களை களமிறக்கினார் டிடிவி தினகரன். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் அனுப்பப்பட்டன.
அதிரடி ரெய்டு
இந்த புகாரின் அடிப்படையில், கடந்த 7ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டின்போது ரூ.89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரம் உள்பட பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றியது வருமான வரித்துறை.
ஆஜரான விஜயபாஸ்கர்
இதனையடுத்து கடந்த 10ஆம் தேதி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். மூன்று நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்த போது தளவாய் சுந்தரம், அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ் ஆகியோர் அங்கு வந்து வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர். இதேபோல சரத்குமார் வீட்டில் சோதனை நடந்த போது அமைச்சர் கடம்பூர் ராஜூவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மோதல் போக்கு
பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ஊடகங்களில் வெளியானது. இந்த நிலையில் வருமான வரித்துறை புலனாய்வுத் துறை இயக்குநர் தமிழக காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
மிரட்டிய அமைச்சர்கள்
விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்த போது, அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், கடம்பூர் ராஜூ மற்றும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததாகவும், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆதாரங்களை அழித்தல், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யுமாறும் தெரிவித்தனர்.
கரண்சின்ஹா உத்தரவு
இந்த புகாரின் அடிப்படையில் புகாருக்கு உள்ளான அமைச்சர்களை விசாரணை நடத்த சென்னை காவல்துறை ஆணையர் கரண் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். சென்னை தெற்கு காவல்துறை ஆணையர் சங்கர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வழக்குப் பதிவு செய்ய ஆணை
விசாரணை நடத்திய பின்னர் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் கரண்சின்ஹா ஆணையிட்டுள்ளார். புகாருக்கு ஆளானவர்கள் அமைச்சர்கள் என்பதால் தமிழக காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அவர்கள் ஒத்துழைப்பு தருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.