பா.ஜ.கவுக்கு ஆதரவு: முகம் திருப்பிய திமுக... கடுப்படித்த சு.சுவாமி
சென்னை: மத்தியில் பாஜக ஆட்சியமைக்க ஆதரவளிக்க மாட்டோம் என்று திமுக தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள சுப்ரமணியசுவாமி, அவர்களின் ஆதரவை நாங்க கேட்கவே இல்லையே என்று காட்டமாக கூறியுள்ளார்.

மத்தியில் பாஜக கூட்டணிதான் ஆட்சியமைக்கும் என்றும், மோடி பிரதமர் ஆவார் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஒரு எம்.பி. இருக்கும் கட்சியின் ஆதரவைக்கூட பெற தயாராக இருப்பதாக பா.ஜ.க அறிவித்துள்ளது.
இதனையடுத்து மோடிக்கு அரசுக்கு ஆதரவளிப்பீர்களா? என்ற கேள்வி பல்வேறு மாநில கட்சிகளிடமும் கேட்கப்படுகின்றன.இதற்கு சில கட்சிகள் தேர்தல் முடிந்தபின்னர் பார்க்கலாம் என்று கூறி வருகின்றன.
ஆதரவு கிடையாது
இதில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற வடமாநில கட்சிகள் ஆதரிக்கமாட்டோம் என தற்போதைக்கு அறிவித்துள்ளனர்.
அதிமுக நிலை
இந்நிலையில் மோடி ஆட்சியமைக்க தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுக ஆதரவளிக்கலாம் என கூறப்பட்ட நிலையில், அதுபோன்றதொரு கருத்தை தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறிய அதிமுக முன்னாள் எம்.பி. மலைச்சாமியை கட்சியிலிருந்து நீக்கி உள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் முடிவு
ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கையை, மோடி ஆட்சியமைக்க ஆதரவு இல்லை என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள முடியாது. தம்மை கேட்காமல், எப்படி இதுபோன்றதொரு கருத்தை ஊடகங்களிடம் தெரிவிக்கலாம் என்பதுதான் ஜெயலலிதாவின் கோபத்திற்கு காரணமாக இருக்கும்.
திமுகவின் நிலை
பாஜக ஆதரவு விஷயத்தில் திமுகவின் நிலை என்ன? என்று ஆங்கில தொலைக்காட்சி ஒன்று அக்கட்சியை சேர்ந்த டிகேஎஸ் இளங்கோவனிடம் கேட்டது. அதற்கு பதிலளித்த அவர், " எங்களுக்கு அதுபோன்ற எண்ணமோ திட்டமோ இல்லை என்றார்.
மதசார்பற்ற ஆட்சி
மத்தியில் மதச்சார்பற்ற கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதே திமுகவின் நிலை என்றும் இளங்கோவன் பதிலளித்தார்.
கிரிமினல்கள் ஆதரவு தேவையில்லை
இதற்கு பதிலளித்துள்ள பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமி, "'இவர்களிடம் யார் ஆதரவு கேட்டார்கள்? அவர்களில் பலர் கிரிமினல்கள், குற்றவாளிகள்" என்று காட்டமாக கூறினார். இது இருகட்சிகளின் எதிர்கால நெருக்கத்திற்கான வாய்ப்பை கேள்விக்குறியாக்கி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
வாய்ப்பூட்டு
தேர்தலுக்கு முன்னர் தமிழக அரசியல் விவகாரம் தொடர்பாக நீங்கள் கருத்து ஏதும் தெரிவிக்காதீர்கள் என்று சுப்பிரமணியசுவாமிக்கு பாஜக தலைமை வாய்பூட்டு போட்டிருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது கூட்டணி பற்றி கருத்து கூறியுள்ளார் சு.சுவாமி.
மூத்த தலைவர்கள் கருத்து
அதே சமயம் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பேச்சாளர்களோ அல்லது மூத்த தலைவர்களோ திமுக குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஆரம்பத்திலேயே திமுக உடனான கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற அவசரத்தில் கருத்து கூறியுள்ளார் சுப்ரமணியசுவாமி.
முன்னெச்சரிக்கை முத்தன்னா
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் ஜெயலலிதாவிடம் பெற்ற அனுபவம் காரணமாக பாஜக ஒருதரப்பினரே ஜெயலலிதாவுக்குப்பதில், திமுக கணிசமான இடங்களை பெற்றால் அந்த கட்சியிடம் ஆதரவை பெறுவது தொடர்பாக பேசலாம் என கூறிவிடக்கூடாது என்பதால் இந்த முன்னெச்சரிக்கை கருத்து என்கின்றனர் சிலர்.
எதுவும் நடக்கலாம்..
ஆனால் ஒரு எம்.பி. இருக்கும் கட்சியின் ஆதரவைக்கூட பெற தயாராக இருப்பதாக பாஜக கூறியிருப்பது சுப்பிரமணியசுவாமிக்கும், மோடி எனது நல்ல நண்பர் என்றும், குஜராத்தில் அவர் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் என்றும் தேர்தலுக்கு முன்னர் கருணாநிதி சர்டிபிகேட் கொடுத்தது டிகேஎஸ் இளங்கோவனுக்கும் மறந்துவிட்டதா என்ன? அரசியலில் எதுவும் நடக்கலாம். என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்க மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications