'தினகரன்' அலுவலகம் எரிப்பு வழக்கு: 12 பேரை ஆஜர்படுத்த சிபிஐக்கு கோர்ட் உத்தரவு!
மதுரை: மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 12 பேரையும் மார்ச் 11-ந்தேதி ஆஜர்படுத்த சிபிஐ-க்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.
மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகம் 2007-ம் ஆண்டு தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில், ஊழியர்கள் முத்துராமலிங்கம், கோபி, வினோத் ஆகியோர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக திமுக பிரமுகர் அட்டாக் பாண்டி உள்பட 17 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் விடுதலை செய்தது.
இதை மறு ஆய்வு செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத எதிர்மனுதாரர்கள் 12 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அப்போது வழக்கில் தொடர்புடைய 3 பேர் தங்கள் மீதான பிடிவாரண்ட் உத்தரவை திரும்பப் பெறக்கோரி மனு செய்திருந்தனர். இந்நிலையில் பிடிவாரண்ட் உத்தரவை செயல்படுத்த சிபிஐ மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
மேலும் இதுதொடர்பாக புதிய பிடிவாரண்ட் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், ஜி.சொக்கலிங்கம் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிபிஐ தரப்பில் புதிய பிடிவாரண்ட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 12 பேரையும் மார்ச் 11-ந் தேதி ஆஜர்படுத்தவும், பிடிவாரண்ட் உத்தரவை திரும்பப் பெறக்கோரி மனு செய்திருந்த 3 பேருக்கும் பதில் அளிக்கவும் சிபிஐ-க்கு உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications