வண்ண வண்ண மலர்கள்.. ஆசை தீர உண்டு மகிழ அம்மா உணவகம்.. களை கட்டிய சாரல் விழா!
நெல்லை: குற்றாலத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மலர்கண்காட்சியை தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.
குற்றாலத்தில் ஆண்டுத் தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3மாதங்கள் சீசன் காலமாகும். இக்காலங்களில் ஆண்டுக்கு 70 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் ஆர்ப்பாரித்துக்கொட்டும் அருவிகளில் ஆனந்த நீராடிட வந்து செல்வதுண்டு.
பல்வேறு சிறப்புக்கள் வாய்ந்த குற்றாலத்தில் உள்ள அருவிகளில் நீராடிட வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் பொழுதை பயனுள்ளதாக மற்றும் வண்ணமும்,அவர்களது சுற்றுலா பயனுள்ளதாக அமையும் வண்ணமும்,ஆண்டுத்தோறும் தமிழக அரசின் சார்பில் சாரல் திருவிழா ஜூலை மாதத்தின் இறுதியில் நடத்தப்படுவதுண்டு.
சாரல் திருவிழா...
இதில் ஏராளமான கலைநிகழ்ச்சிகள் இடம் பெறுவதும் வழக்கம் .இந்தாண்டு சாரல் திருவிழா நேற்று தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று குற்றாலம் நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டிகள் நடைபெற்றன.
மலர்க் கண்காட்சி...
பின்னர் ஐந்தருவி சுற்றுசூழல் பூங்காவில் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்க்கண்காட்சி, வாசனைதிரவி கண்காட்சி,காய்கறிகளால் ஆன விலங்குகள் கண்காட்சி உள்ளிட்டவைகளின் தொடக்க விழா நடைபெற்றது.
அமைச்சர் ராஜலட்சுமி...
இவ்விழாவில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமிகலந்து கொண்டு மலர்க்கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் சட்டசபை உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.
சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்...
மலர்கண்காட்சியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கலந்துக் கொண்டு ஆர்வமுடன் கண்காட்சியில் இடம் பெற்ற வண்ண மலர்கள்,காய்கறிகள்,விலங்குகளை கண்டு களித்தனர்.இங்கு அம்மா உணவகம், மகேந்திரகிரி ராக்கெட் தளம், கூடங்குளம் அணுஉலை உள்ளிட்ட ஸ்டால்களும் இடம் பெற்றுள்ளன.