அய்யய்யோ...ஏ.டி.எம்.மைக் காணோம்.. சிவகிரியில் ஒரு டென்ஷன் போர்டு!
சிவகிரி: நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே வங்கியையும், ஏடிஎம்மையும் காணோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வைத்த தட்டி போர்டால் பொதுமக்கள் பீதியடைந்து விட்டனர்.
சிவகிரி பஸ் நிலையம் அருகே சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கிளை உள்ளது. இந்த வங்கியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்களும் கணக்கு தொடங்கி பண பரிவர்த்தை செய்து வருகின்றனர். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக இருந்து வருகின்றனர்.
இந்த வங்கியில் குறைநத இடவசதியே இருப்பதால் மாதத்தின் முதல் வாரத்தில் பணம் போட, எடுக்க கூட்டம் அலைமோதும். இதனால் ஓய்வூதியம் பெற வரும் முதியவர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் வங்கியின் மேலாளர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய மேலாளர் இன்னும் பதவியேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் வாடிக்கையாளர்களால் புதிய கணக்கு தொடங்க முடியவில்லை. வைப்பு தொகை செலுத்தவோ, முதிர்ந்த தொகையை பெறவோ முடியவில்லை. எவ்வளவோ முறையிட்டும் வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுகுறித்து அறிந்த சிவகிரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், நேதாஜி ரோட்டில் ஐயையோ வங்கியை காணவில்லை, கூடவே ஏடிஎம்மையும் காணோம்யா என தட்டி போர்டு வைத்து விட்டனர். இதைப் பார்த்து மக்கள் ஜெர்க் ஆகி அதிர்ச்சியுடன் அதைப் படித்துப் பார்த்து, அட இது போராட்டமா என்று இயல்பு நிலைக்குத் திரும்பும் நிலை ஏற்பட்டது.
இந்த வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் கட்டிடம் கடந்த சில வருடங்களாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. வங்கி நிர்வாகம் இப்படி இருந்தால் பொதுமக்கள் பணத்திற்கு யார் பாதுகாப்பு என கேள்வி எழுப்புகின்றனர் வாடிக்கையாளர்கள்.












Click it and Unblock the Notifications