வனத்துறையினரின் அலட்சியம்... குரங்குகள் கடித்து பள்ளி மாணவி காயம்
கம்பம்: கூடலூர் பகுதியில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து பள்ளிமாணவியை குரங்குகள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூண்டுகள் வைத்து வனத்துறையினர் குரங்குகளைப் பிடிக்காததே இச்சம்பவத்திற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கூடலூர் நகர குடியிருப்புப் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 3 குரங்குகள் புகுந்தது . வீடுகளுக்குள் புகுந்து அங்கிருக்கும் உணவு பொருட்களையும், சிறுவர்கள் வைத்திருக்கும் பொருட்களையும் பறித்து கொண்டு இக்குரங்குகள் ரகளை செய்து வந்தன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
உடனடியாக குரங்குகளைப் பிடித்துச் செல்லும்படி, வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், புகாரின் பேரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை கூடலூர், சக்கனநாயக்கர் தெருவை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் 7 வயது மகள் பிருந்தா குரங்குகளின் தாக்குதலுக்கு ஆளானார். மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது, குரங்குகள் பாய்ந்து அவரது தலைமுடியை இழுத்து உடலில் பிராண்டின.
பிருந்தாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது தாய் ராமலட்சுமி குரங்குகளை விரட்டி சிறுமியை மீட்டார். உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார் பிருந்தா. இதே போன்று குரங்குகளின் பிடியில் சிறு குழந்தை சிக்கியிருந்தால், அவரது உயிருக்கே ஆபத்தான போயிருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இனிமேலாவது குரங்குகள் நடமாட்டத்தை தடுக்க கூண்டுகள் வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினரை வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அலுவலர் கூறும்போது, ‘முன்பு கூடலூர் வனசரகம் என்று ஒரே சரகமாக இருந்தது. தற்போது அது பிரிக்கப்பட்டு கம்பம் மேற்கு, கம்பம் கிழக்கு, கூடலூர் என 3 வனசரகமாக பிரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த எல்லை எந்த சரகத்தில் வரும் என்பதில் வனஅலுவலர்களிடையே பிரச்சினை உள்ளது. அதனாலேயே பிடிக்க முடியவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications