திருப்பதி அறங்காவலராக சேகர் ரெட்டியை நியமித்ததே ஓபிஎஸ்தான்... சி.வி. சண்முகம்
திருப்பதி தேவஸ்தான அறங்காவலராக சேகர் ரெட்டியை நியமித்ததே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்தான் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
சென்னை: திருப்பதி தேவஸ்தான அறங்காவலராக சேகர் ரெட்டியை நியமித்ததே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்தான் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியான நாளில் இருந்து இரு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் மாறி மாறி கல்லெறிந்து கொண்டே இருந்தனர். இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர் தங்கள் நிபந்தனைகள் நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.
இதனால் இரு அணிகளும் முட்டி மோதிக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர் நிபந்தனைகளை வைக்க தொடங்கிய நாள் முதல் அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாகவே பேசி வந்தார்.
பதில் சொல்ல முடியாது
கொடநாடு காவலாளி கொலையால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்ததற்கு அவர் என்ன வேணாலும் பேசுவார். அவருகெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.
டைரி குறிப்பு
மணல் மாபியா சேகர் ரெட்டியின் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறையினர் சோதனையில் மூட்டை, மூட்டையாக பணமும், ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அதே வேளையில் அவரது வீட்டில் இருந்து முக்கிய டைரி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்த வருமான வரித்துறையினர், அந்த டைரியில் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், மூத்த அதிகாரிகள் ரூ.300 கோடி லஞ்சம் பெற்றதாக பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழக அரசுக்கு கடிதம்
அந்த டைரியில் குறிப்பிடப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் பட்டியலை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் வழங்கினர். இதனால் பலர் பீதியடைந்து வருகின்றனர். எனினும் லஞ்ச ஒழிப்பு துறை ஆணையர் பொறுப்பு தற்போது கிரிஜா வைத்தியநாதனிடம் இருந்து பறிக்கப்பட்டு எடப்பாடியின் ஆதரவாளரான நிரஞ்சன் மார்டியிடம் வழங்கப்பட்டுள்ளது.
பதவி கொடுத்ததே ஓபிஎஸ்தான்
இந்த டைரி விவகாரம் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், ஓ.பன்னீர் செல்வம் பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தங்களை சேகர் ரெட்டிக்கு வாரி வழங்கினார். மேலும் திருப்பதி தேவஸ்தான அறங்காவலராக சேகர் ரெட்டியை நியமித்தவரும் அவரே. நம்பியார், அசோகன் போல் ஓபிஎஸ்ஸும், சேகர் ரெட்டியும் போட்டோவுக்கு போஸ் கொடுத்திருப்பதை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்றார் அவர்.
மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
சேகர் ரெட்டியுடன் தொடர்பில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் அவருடன் எடுத்துக் கொண்டு புகைப்படம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தாது. ஆனால் டைரி விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்த கடிதம் அனுப்பியுள்ளது. அதாவது மத்திய அரசு, தமிழக அரசின் மீது வீண்பழி போடுவது போன்ற அர்த்தத்தில் சிவிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார்.