மதவெறியில் இருந்து நாட்டை விடுவிக்க ஸ்டாலின் கைகோர்ப்பார்.. டி.ராஜா
நாட்டை மதவெறி அரசியல் அச்சுறுத்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை : நாடு ஒற்றைப்பரிமாண நாடாக மாறி அச்சுறுத்தல் விடுக்கும் இந்த நிலையில் கருணாநிதி வைரவிழா மேடையில் இருந்திருந்தால் நிச்சயம் மாநில சுயாட்சிக்கு எதிராக குரல் கொடுத்திருப்பார் என்று இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் கருணாநிதியின் வைரவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய டி. ராஜா, "இந்திய வரலாறே திரும்பிப் பார்க்கும் வகையில் அத்தனை ஆளுமைகளையும் கொண்டவர் கருணாநிதி. அவர் இந்த விழா மேடையில் இருந்திருந்தால் எதைப்பற்றி பேசியிருப்பார் என்று சிந்திக்கிறேன்.
வேற்றுமைகளை பாராட்டும் இந்த நாட்டில் தற்போது ஒற்றுமை அவசியமானதாக இருக்கிறது. ஒற்றைப் பரிமாண நாடாக இந்தியா மாறி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கருணாநிதி இந்த மெடையில் இருந்திருந்தால் நிச்சயம் மத்தியில் கூட்டடாட்சி மடாநில சுயாட்சி என்பதை முழங்கியிருப்பார்.
அகில இந்திய அளவில் மத்திய கூட்டாட்சி காலில் போட்டு நசுக்கப்படும் இன்றைய காலகட்டத்தில் மாநில சுயாட்சிக்காக குரல் கொடுக்கும் முதல் தமிழனாக இருந்திருப்பார். ஜாதி, மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமைகள் அகற்றப்பட வேண்டும் என நினைப்பவர் கருணாநிதி. ராமர் பாலம் கட்டப்பட்டது என்று சொல்லப்பட்ட காலத்திலும் கூடி ராமர் என்ன என்ஜினியரா என்று தைரியமாக கேட்கும் நெஞ்சுரம் கொண்டவர், அவர் நம்முடன் இந்த மேடையில் இல்லாவிட்டாலும், அவர் இருந்திருந்தால் இதைத் தான் வலியுறுத்தியிருப்பார் என நினைக்கிறேன்.
கருணாநிதி ஒரு சமூகப் போராளி என்னை சந்திக்கும் போதெல்லாம் பெரியார் கொள்கைகளை முதலில் பார்க்காமல் இருந்திருந்தால் மார்க்சிய கொள்கையைத் தான் பின்பற்றியிருப்பேன் என்று கூறினார் அப்போது நான் பெரியாருக்கும், காரல் மார்க்சுக்கும் பெரிய இடைவெளி இல்லை என்று கூறினேன். இந்த இரு கொள்கையாளர்களும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது.
கருணாநிதி வழியிலேயே திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் எங்களுடன் கைகோர்த்து இந்தியாவை மதவெறியில் இருந்து விடுவிக்க ஸ்டாலின் எங்களோடு கை கோர்ப்பார் என நம்புகிறேன். சென்னை மாகாணத்தை மெட்ராஸ் என்று பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தியவர் கருணாநிதி, அதனால் மெட்ராஸ் வாழும் காலம் மட்டும் கருணாநிதியின் புகழும் நீடித்திருக்கும், என ராஜா பேசினார்.