திருச்சியில் பயங்கரம்.. ரம்யாஸ் ஹோட்டல் அதிபர் மனைவி, மருமகளை கட்டிப் போட்டு துணிகர கொள்ளை!
திருச்சி: திருச்சியில் பிரபலமான ரம்யாஸ் ஹோட்டல் அதிபரின் மனைவி, மருமகளைக் கட்டிப் போட்டு பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டப் பகலில் இந்த சம்பவம் நடந்திருப்பதால் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
இந்த துணிகர செயலில் ஈடுபட்டவர்கள் ரம்யாஸ் ஹோட்டலில் வேலை பார்க்கும் வட மாநில ஊழியர்களாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இந்த ஹோட்டலில் பெரும்பாலான ஊழியர்கள் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக திருச்சி போலீஸார் தனிப்படைகளை அமைத்து தீவிரமாக விசாரணையில் இறங்கியுள்ளனர். குற்றவாளிகள் மிக நெருக்கத்திலேயே இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. விரைவில் அவர்கள் சிக்குவார்கள் என்றும் போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ரம்யாஸ் ஹோட்டல்
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ளது ரம்யாஸ் ஹோட்டல். திருச்சியில் பிரபலமான ஹோட்டல்களில் ஒன்று. இதன் உரிமையாளர் நல்லுச்சாமி. 65 வயதாகும் இவரது மனைவி பெயர் சரஸ்வதி. இவருக்கு 60 வயதாகிறது. நேற்று சரஸ்வதியும், அவரது மருமகள் 30 வயது நிர்மலா மற்றும் வேலைக்காரப் பெண் தனம் ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.
பின்வாசல் வழியாக நுழைந்த திருடன்
அப்போது பிற்பகல் வாக்கில் பின்பக்கம் வழியாக ஒரு மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்துள்ளார். அதைப் பார்த்து அதிர்ந்த தனம், யார் நீ என்று கேட்டு கூச்சலிட்டார். சத்தம் கேட்டு மற்றவர்கள் வருவதற்குள் தனத்தின் முகத்தில் அந்த நபர் மிளாகாய்ப் பொடியை தூவி விட்டான். இதையடுத்து தனம் அலறிக் கத்தினார். அப்போது சரஸ்வதி அங்கு ஓடி வந்தார்.
கழுத்தில் கத்தியை வைத்து
இதையடுத்து கத்தியை எடுத்த திருடன், அதை சரஸ்வதி கழுத்தில் வைத்து அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டான். பின்னர் சரஸ்வதி, தனம் ஆகியோரை கயிற்றால் கட்டிப் போட்டு விட்டு பீரோவைத் திறந்து அதில் ஏதாவது சிக்குகிறதா என்று தேடியுள்ளான். அந்த சமயத்தில் நிர்மலா ஓடிவரவே அவரிடமும் கத்தியைக் காட்டி அவர் போட்டிருந்த 9 பவுன் சங்கிலி மற்றும் அவரது கைப்பையில் இருந்த ரூ. 65 ஆயிரம் பணத்தைப் பிடுங்கிக் கொண்டான். பின்னர் நிர்மலாவையும் கட்டிப் போட்டான்.
மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட்டம்
அந்த சமயத்தில் இன்னொரு வேலைக்காரப் பெண் வீட்டின் பின்வாசல் வழியாக வரவே திருடன் அங்கிருந்து தப்பி வெளியேறி மோட்டார் பைக்கில் ஏறி ஓடி விட்டான். இதுகுறித்து போலீஸுக்குத் தகவல் தரப்பட்டது. திருடன் வந்து போனது குறித்து சிசிடிவி கேமரா மூலமாக ஆராயப்பட்டு வருகிறது.
சிசிடிவி கேமராவில் சிக்கினான்
இந்த நிலையில் நல்லுச்சாமி வீட்டிலிருந்து தப்பி பைக்கில் போன திருடன், ஒரு வீட்டின் சிசிடிவி கேமராவில் சிக்கியுள்ளான். இதையடுத்து அதை வைத்து தற்போது போலீஸார் விசாரணையை முடுக்க விட்டுள்ளனர்.
வட இந்தியக் கொள்ளையன்
திருடிய நபர் வட இந்தியாவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று நிர்மலாவும், சரஸ்வதியும் கூறியுள்ளனர். இதனால் ரம்யாஸ் ஹோட்டலில் வேலை பார்க்கும் வட இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்கள் யாரேனும் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்த கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.